பாலை நிலத்துப் பெண்ணின் குரல்கள்





டவுண் ரவுணில் எனக்கு பொழுதுபோக்குவதற்கு உகந்த இடங்களாக ஐந்தாறு பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. அண்மையில் ஒரு மாலைநேர டவுண்ரவுண் பயணத்தில் பூமழை தூறி சனிக்கிழமையை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தபோது வழமைபோல ஒரு பழைய புத்தகக் கடையை நாடவே நேர்ந்தது. அங்கு பொறுக்கிய சிலவற்றில்  அண்மையில் வாசித்து முடித்த நூலொன்று சிலநாட்களாகவே என்னுள் சஞ்சலம் செய்துகொண்டிருந்தது. Voices in the Desert –An  Anthology of Arabic - Canadian Women  Writers  என்ற நூல்தான் அது.

அது என் கைகளிலிருந்தபோதே அதன் கனதியை நான் உணர்ந்திருந்தேன். நூலின் கனதியென்பது அதன் கனபரிமாணத்தால் கிடைப்பதல்ல. மாறாக நூலின் கனதி, அது வியாபிக்கும் தளங்களும், தளங்களில் அர்த்தம் வியாபிக்கும் முறைமையுமே ஆகும்.

பெண்ணின் தனித்துவமான குரல்கள் உலக இலக்கியப் பரப்பில் ஒலிக்கத் தொடங்கி நீண்டநாட்கள். அராபிய-கனடாப் பெண்களின் குரலின் வீச்சை இலக்கியம் காணத் தொடங்கி அதிக காலமில்லை. கனடிய மண்ணில் அவர்களின் வருகை கவனிக்கக் கூடியவளவு தொடங்கியது அறுபது எழுபதுக்களில்தான். அதிலும் அதிகமானவர்கள் கியுபெக்கிலேயே குடியேறினார்கள். அதனால்தான் அதிகமான அராபிய-கனடியப் பெண் எழுத்தாளர்கள் தங்களது சொந்த மொழிகளுடன் ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரிந்து மும்மொழி வல்லுநர்களாக இருப்பது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு குடியேறியவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். சிலர் எகிப்தையும், சிலர் அல்ஜீரியாவையும், இன்னும் சிலர் சிரியாவையும், சிலர் லெபனானையும் சேர்ந்தவர்களாயிருந்தனர். இந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களிலிருந்து தோன்றிவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள். இவர்களையே  மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் எனப்படுகிறது.

தலைமுறை இடைவெளி அவர்களது இலக்கியத்தில் பெரிதாகவே பிரதிபலிக்கச் செய்கிறது. ஆயினும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்த தளநிலைமைகளின், கருத்தியல்களின் மயக்கமும் புதிர்மையும் எழுதத் தொடங்கியுள்ள இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இல்லையென்ற ஒரு சாதக அம்சம் கவனிக்கப்பட்டாக வேண்டும்.

இவர்களின் குரலில் தொனிக்கும் ஆவேசமும், ஆணித்தரமும் இலக்கியப் பண்புகளாயே விரிகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் குரலாக இவர்களதை அடையாளப்படுத்துவது அதிக சிரமமில்லாதது. மோனா லரிஃப் கட்டாஸ் என்ற எழுத்தாளரின் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ‘இரவினதும் பகலினதும் குரல்கள்’ என்ற நூல் இன்றைய கனடிய இலக்கியத்தின் பன்முக விகாசத்துக்கு சரியான எடுத்துக்காட்டு. எகிப்திய புராணிகக் கதைகளின் உள்வாங்கலாக, எகிப்தின் சரியான ஆன்மீகத்தைக் காட்டக் கூடிய நூலாக அதை இன்று விமர்சகர்கள் இனங்காணுகிறார்கள்.

யதார்த்த தளத்தில் அப்ளா பர்கூட், மற்றும் ரூபா நடா போன்றவர்களின் எழுத்துக்கள் விரிகின்றனவெனில், ஆன் மரி அலன்ஸோ, நடியா கலெம் போன்றவர்களது எழுத்துக்கள் பின்நவீனம் சார்ந்தவையாய் கொடிகட்டுகின்றன. இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தங்கள் கரங்களைப் படரவிடும் இவர்களின் இலக்கியப் போக்குகள் உள்வாங்கப்பட வேண்டியன.

மட்டுமில்லை. இதில் படைப்பாக்கங்களைத் தந்திருக்கும் ஒன்பது பேர்களது வாழ்வியல், தொழில் நிலைமைகளும் உயர்வதற்கு இந்தச் சமூகம் அனுமதித்துள்ள பெண்ணின் சராசரி எல்லைகளில்லை என்பதும் கவனிக்கப்பட்டாக வேண்டும். சிலபேர் தலைசிறந்த பத்திராதிபர்கள், சிலர் முக்கியமான பதிப்பாளர், சிலர் தொழிலதிபர்கள். மேலையுலகத்தின் அத்தனை அறைகூவல்களையும் எதிர்கொண்டபடியேதான் இவர்களது இலக்கிய முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்பது அனைத்துச் சமூகப் பெண்களுக்கும் முன்னுதாரணமானது.

‘அற்றம்’ என்ற இதழை இப்போது நினைத்துக்கொள்ள முடிகிறது. கனடாத் தமிழ்ப் பரப்பில் பிரதீபா, தான்யா, கௌசலா என்ற மூன்று பெண்களினால் கொண்டுவரப்பட்ட சிற்றிதழ் அது. அதே பெண்களில் இருவரின் முயற்சியில் (தான்யா, பிரதீபா ) ‘ஒலிக்காத இளவேனில்’ என்ற பெண் கவிஞர்களின்  கவிதைத் தொகுப்பும் சிறிதுகாலத்துக்கு முன்னர் வெளிவந்தது. இத்தகைய சில தொகுப்பு அடையாளங்களைத் தவிர, கனடாத் தமிழ்ப் பெண்களின் எழுத்துலகம் வெறுமை பூண்டிருக்கிறதாகவே தோன்றுகிறது. இதனுடைய மூலம் கண்டடையப்பட்டாக வேண்டும். இங்கு ஏதோ பிரச்சினை இருக்கிறதையே இது காட்டுகிறது. இருள்போல, இன்னும் இருளில் மறைந்திருப்பதாக பாட்டிக் கதைகள் கூறுவதுபோல ஒன்று அனைத்து ஆர்வங்களையும் அழித்தொழித்துவிடுகிறமாதிரி ஒரு மாயலீலையை  நிகழ்த்திக்கொண்டிருப்பதால் இல்லாமல் இவை நடந்திருப்பதற்குச் சாத்தியமில்லை.

இத்தகைய ஆதங்கத்திலேதான் ‘பாலை நிலத்துக் குரல்கள்’கூட எனக்கு மிகப் பிடித்தமானதாகத் தோன்றியிருக்குமோ? என் ஆதங்கம் நிஜமேயானாலும், நூலின் கனதிபற்றிய தீர்மானம் அதனாலே ஆனதில்லை. கட்டுரை, சிறுகதை, கவிதையென பல்வேறு இலக்கிய வகையினங்களினதும் கூட்டு நூலான அது உண்மையில் இலக்கியமொன்று மட்டுமே செய்யக்கூடிய அவசத்தை, சஞ்சலத்தை உருவாக்கவே செய்கிறது.

ஜாமினா மௌகூப்பின் ‘துக்கம்’ என்ற கவிதை இவற்றுள் ஒன்று. அல்ஜீரியா துயரம் சுமந்த பூமி. ஸ்பார்டகஸின் பௌராணிகம் பொலிந்த துயரக் கதை, நிகழ்ந்ததில்லையெனில், பின்புலத்திலிருந்த சோகமும் துயரமும் கொடுமைகளும் புனைவானவையில்லை. பின்னால் வெள்ளையரின்  ஆதிக்கப் போட்டிகளில் அது அடைந்த சோகம் வரலாறு. இந்த வலிகளோடு பெண்ணாகிய சோகங்களும் சேர்ந்து கொண்ட ஓர் உயிரின் வலியை சிறிய கவிதையொன்றில் அற்புதமாக விளக்கியுள்ளது ‘துக்கம்’ என்ற அந்தக் கவிதை. அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.




துக்கம்


துக்கம்
காரணங்களை
பற்றிக்கொள்கிறபோது…

 காரணம்
கேள்விகளுள்
அழுந்திக்கொள்கிறபோது…

கல்லாக மாறிவிடவே
விரும்புகிறேன்
காற்றுடன் உரையாடியபடி.

அப்போது
பாறையாக மாறிவிடவே
விரும்புகிறேன்
கடலின் சகோதரியாக,
இழந்த கல்லை மீண்டுவிட்ட
குழந்தையின் மனோநிலையோடு.

கவிதை விரித்துச்செல்லும் அர்த்தவெளி  விசாலமானது. அந்த மண்ணையும், மக்களது  வாழ்முறைகளையும் கொண்டு கவிதையை நெருங்கினால் அதன் பன்முகவெளி வாசக அனுபவமாகும்.
‘பாலைநிலத்துக் குரல்கள்’ கனதியானது மட்டுமில்லை, திசைகாட்டுவதுமாகும்.
000

தாய்வீடு, பங்குனி 2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்