பக்க எழுத்துக்களும்


பக்க எழுத்துக்களும் 
பக்க விளைவுகளும்



எழுத்துக்களின் ஊற்றுக் கிணறுகளாக ‘பக்க எழுத்தாளர்க’ (columnists) ளைச் சொல்ல முடியும். ஆனாலும் தம் துறைசார்ந்த எழுத்துக்கான தேடலையும் பயணங்களையும் மேற்கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே நல்ல எழுத்துக்கள் பிறந்திருக்கின்றன.

பாலியல், அரசியல், சமூகம், இலக்கியம் என பல்வேறு தளங்களில் இந்த பக்க எழுத்துக்களை நாம் காணமுடியும். என்னால் எந்த விஷயத்தைப்பற்றியும் எழுத முடியுமென்று எழுதப் புகுந்தவர்கள், பிழைப்புவாரிகளாகத் தேங்கிப் போனதும், தம் துறையை அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய வௌ;வேறு துறைகளைத் தேர்ந்து எழுதத் தொடங்கியவர்கள் உலகப் புகழ் வாய்ந்த பக்க எழுத்தாளர்களாக விளங்கியதுமே கடந்த கால எழுத்தின் வரலாறு நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிற செய்தி.

பாலியல் குறித்த பக்க எழுத்தில் பிரபலமான டான் சவேஜ், அரசியல் சமூகம் இலக்கியமென பல்வேறு தளங்களில் எழுதிப் பேர்பெற்ற சரஜிவோ நாட்டு பக்க எழுத்தாளர் அலெக்சாண்டர் ஹேமன், சமூக அக்கறையை வெளிப்படுத்த பல்வேறு கடத்தல் விவகாரங்களை எழுதிய மெக்ஸிக்கோ நாட்டு மிக்கேல் லொபேஸ் வெலங்கோ முதலியோர்போல் ஆழமான விஷயங்கள் குறித்து எழுதி சுய பாதிப்புக்களை அடைந்தவர்கள் பலபேர் இருக்கிறார்கள். கடத்தல்காரரின் ஏவுதலால் ஒரு அதிகாலை ஐந்தரை மணியளவில் இனந்தெரியாதோரினால் லொபேஸ் வெலங்கோவின் மனைவி மற்றும் மகன் ஆதியோர் கொலை செய்யப்பட்ட செய்தி கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் நடந்திருக்கிறது.

பக்க எழுத்தின் தொடக்க காலமான இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பத்திரிகையில் வெளியான அல்லது அக் காலப் பகுதியில் பலரையும் கவர்ந்தவோ பாதித்தவோவான விஷயம் குறித்து ஆசிரியர் பகுதிக்கு கடித வடிவத்தில் எழுதப்பட்டவைகளாகவே பக்க எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பின்னால் சிறிது நகைச்சுவையான விஷயங்கள் குறித்து எழுதப்படுபவையாக அவை உருமாறின. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேல் ஊடகவியற் தொழில்போலவே பக்க எழுத்தின் அர்த்தங்களும் பல்கிப் பலமேறின.
செய்தி மற்றும் கட்டுரை வகையினத்தைவிட இன்று மிகவும் கடினமான பத்திரிகைத் துறை எழுத்தாகக் கருதப்படுவது பக்க எழுத்துத்தான்.
‘தேவகாந்தன் பக்க’மென்ற இந்தப் பக்கத்தில் நான் எழுதிய பன்னிரண்டு எழுத்துக்களும் வௌ;வேறு விஷயங்கள் குறித்தவையெனினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கலை, இலக்கியம், சமூகம் மட்டும் சார்ந்தவையாய் அமைந்து வட்டத்தை மிக விரிவாக இட்டுக்கொள்ளாதவை. ஆதனால் காத்திரமான சில விஷயங்களையேனும் சொல்லியிருக்கிறேன் என நான் நம்ப போதிய இடமிருக்கிறது.

அதனால் இந்த எனது பக்க எழுத்தின் முடிப்பாக எழுதப்படுகின்ற இந்த இடத்தில் பக்க எழுத்துப்பற்றிய கருத்தைச் சொல்லவேண்டுமென ஏனோ தோன்றிற்று, சொல்லுகிறேன்.

பக்க எழுத்து என்பது எப்போது சிறந்த எழுத்தாக அமைகிறது என யோசித்தால், அது பக்க விளைவுகளைச் சந்திக்கிறபோது என தயங்காமல் கூறிவிடலாம். வாசக மனத்தைப் பாதிக்கக்கூடியதாக மட்டுமில்லை, அந்த எழுத்து புறத்திலிருந்து வரும் எதிர்ப்புக்களினாலான பாதிப்பாகவும் இருக்கவேண்டும். அவ்வகை எழுத்தே வலிதான பக்க எழுத்தாக அமையமுடியும். வலிமையற்ற எழுத்துக்கு அகப் பாதிப்பும் இல்லை, புறப்பாதிப்பும் இல்லை.
இவ்வகையான எழுத்து வன்மையை நிறைவேற்ற எழுதப்படும் பத்திரிகையின் அரசியல், சமூக நிலைப்பாடு முக்கியமானதெனினும், பல பத்திரிகைகள் இது எழுதுபவரின் நிலைப்பாடு எனக் கூறித் தமது நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு பக்க எழுத்தாளனை ஊக்குவித்தும் இருக்கின்றன. அவ்வாறான பத்திரிகைகள் அமைவது பக்க எழுத்தாளனுக்கு ஒரு கொடை.

ஒரு கட்டுரையாளனும், ஒரு பத்தி எழுத்தாளனும் வேறுபடுகிற இடம் ஒரு மென்மையான பிரிகோட்டினால் உணர்த்தப்படுகிறது. ஒரு எட்டுப் பக்கக் கட்டுரையின் உயிரை, ஒரு பக்க எழுத்தாளன் தனது பக்க எழுத்தில் பெய்துவிட முடியும். ஆனால் ஒரு பக்க எழுத்தின் வீரியத்தை பதினாறு பக்க கட்டுரையினாலும் உண்டாக்கிவிட முடியாது. அந்த வகையில் பார்க்கிறபோது, ஏனைய சிறுகதை வடிவங்களுக்கும் கவிதைக்கும் உள்ள தாக்கத்தின் வீரிய அளவு வித்தியாசத்தைச் சொல்லலாம்போலத் தோன்றுகிறது.

எனது பல்வேறு பக்க எழுத்துக்கள்பற்றியும் அவ்வப்போது நேரிலும், தொலைபேசியிலுமாக என்னிடம் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சூழலில் இது நல்ல ஒரு சகுனம். இந்த தருணத்தில் அந்த வாசகர்களுக்கான நன்றியை நான் தெரிவிப்பது பொருத்தமானது.
ஒருபோது என் ஒரு பாலினர் குறித்த பக்க எழுத்துக்கு இணைய தளங்களில் மிக ஆக்ரோஷமான எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றினுக்கு நான் தீவிரமான மறுப்புக்கூட எழுதியதில்லை. அந்த மறுப்புக்களை நான் மதித்திருந்தபோதும்தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பக்க எழுத்து ஒன்றின் ஆகக் கூடுதலான தளம், அது கிளர்த்திவிடுகிற பிரச்சினை மட்டும்தான். அல்லது விஷயம் மட்டும்தான். வாத பிரதிவாதங்கள் வேறுதளத்தில் நிகழ்த்தப்பட வேண்டியவை. இரண்டாவது, எதிர்த்திசைப் பயணங்களாகவன்றி ஒரே திசையில் வேறுவழிப் பயணங்களாக நம் கருத்துக்கள் இருந்ததில் பிரதிவாதமே அதில் அவசியமற்றதாகிவிட்டது.
அதில் நான் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருந்தது பக்க எழுத்து குறித்து. பக்க எழுத்தில் விஷய மயக்கம் ஏற்படாதிருக்கவேண்டும் என்பதே அது.
‘தாய்வீ’ட்டில் தை 2012இலிருந்து நான் தொடரவிருக்கிற நாவல் முடிந்த பின் இதே பத்திரிகையிலோ, அல்லது இணைய பத்திரிகையிலோ வேறோர் அச்சுப் பத்திரிகையிலோ கூட  நான் ஒரு ‘பக்க எழுத்து’த் தொடரொன்றை ஆரம்பிக்க முடியும். அப்போது இந்த அனுபவங்களுடான எழுத்து ஆழப் பதிக்கப்பெறும்.

000

தாய்வீடு, 2011

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்