கலித்தொகைக் காட்சி: 8


‘திங்களைத்  தேன்கூடென எண்ணி 
ஏணிகட்டும் குறிஞ்சிநில  மக்கள்’




இலக்கியத்தில் கற்பனை என்பதுபற்றி மேலைநாட்டு விமர்சகர்களிலிருந்து, அவர்களது சிந்தனை அடித்தளத்தில் நின்று இவவ்வகையில் சிந்திக்கின்ற தமிழ்நாட்டு விமர்சகர்கள்வரை ஒத்த அபிப்பிராயம் நிலவுவதாகத் தெரியவில்லை.

இலக்கியத்தில் எந்தளவுக்குக் கற்பனையைப் புகுத்தலாம் என்பதுபற்றியும், இலக்கியத்தில் கற்பனையைப் புகுத்தலாமா கூடாதா என்பதுபற்றியும் பலமான விவாதங்கள் கிளம்பி ஓய்ந்திருக்கின்றன.
யதார்த்தமான கற்பனையை இலக்கியத்தில் புகுத்துவது இலக்கியரசனைக்கு அவசியமானது என்ற கருத்தைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இலக்கிய விமர்சனம் பண்படுத்தப்பட்டு செழித்து வளர்ந்துள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டு முடிவு இது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலித்தொகைக் காலத்திலே கற்பனை ஒன்று வருகின்றது. அது யதார்த்தமானதா என்று கேட்டால் இல்லையென ஒரேயடியாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அது இனிமை பயக்கிறதாஎன்று கேட்டால் இனிமை பயக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

குறிஞ்சிநிலத்திலே புணர்தல் நிகழ்தற்கும், அது பகற்குறி, இருவுக்குறிஎன்பதோடு மட்டும் நில்லாமல் திருமணம்வரை முடிதற்கும் தோழி பெரும் காரணகர்த்தாவாக இருப்பாள். ஒருதலைவியின் திருமணத்தை முடிக்கவேண்டி தலைவியின் பெற்றோருடன் உரையாடுகிறாள் தோழி. அப்போது தலைவனின் மலையழகுச் சிறப்பை கற்பனை நயம் தோன்றக் கூறி நயக்கிறாள் அவள்.

தோழியின் பொறுப்பை எம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தால் இந்தக் கருத்தைக் கூறுகின்ற தோழியின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும். தோழியின் நோக்கம் தலைவனுடையமலைச் சிறப்பைக் கூறுவதோடுஅவனது குடும்பத்தின் பெருமையையும் கூறிவிடுவதேயாகும்.
தோழி கூறுகிறாள்:

வானூர் மதியம் வரைசேரின்
அவ்வரைத்
தேனின் இறாஅல் என
ஏணி இழைத்திருக்கும்
கானகல் நாடன் மகன்

‘ஆம், தலைவனை யாரென்று நினைத்தீர்கள்? வெண்மதி மலையிலே பவனிவருகிறபோது அதன் தோற்றம் மலைகளிலே வளர்ந்துள்ள சந்தனமரங்களில் தொங்குகின்ற தேன்கூட்டினைப்போல் இருக்கும். அதைக் கண்டு மகிழ்ந்த மலைநாட்டவர் அந்தத் தேன் கூட்டை எடுப்பதற்காக ஏணிகட்டி எடுத்துவைப்பர். அத்தகைய நிலவளமுள்ள குறிஞ்சிநிலத் தலைவன்.’

 தோழி கூறுவதாக அமைந்த அப் பாடலின் கருத்து இது.
‘மழை நுழை திங்கள்’அப்படி தேன்கூட்டைப்போல  காட்சிதருதல் சாத்தியமே. ஆனால் அதைக் கைப்பற்ற ஏணி இழைத்துவைக்கின்ற மலைஞரின் செயல் நகைப்பை விளைக்கின்றது. இந்த நகைப்பு ஆங்கிலத்தில் சொல்லுகின்ற ‘ஸடயர்’ என்பதன் பண்பினால் ஏற்படுவதல்ல என்பதையும் நாம் மறக்கக்கூடாது.  இது வரம்புமீறிய கற்பனையாகும்.

மலைவாழ்நர் மதுவுண்டு களிக்கக்கூடிய வாய்ப்பு  இருத்தலினாலும், காதல் மயக்கம் கொள்ளும் புணர்தல் பண்பு குறிஞ்சிநில ஒழுக்கமாக இருப்பதனாலும் இந்தக் கற்பனையின் கருத்தை ஓரளவு பகுத்துப் பார்த்து ஏற்கவும் முடிகின்றது.

அழகிய நங்கைஒருத்தி வீதிவழியே வந்ததை காளை ஒருவன் கண்டு காதல் கொண்டான். அவளோ காதலுணர்வு பெறாத இளம்பெண். ஆதலால் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. வேதனைமீதூர்ந்த தலைவன் ஆற்றாமையுடன் கூறுகிறான்:

பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீஅறியாய்
யாதொன்றும் வாய் வாளாது இறந்துஈவாய்! கேள் இனி

என்று அவளைஅழைத்து ‘உன்மீதும் குற்றமில்லை, உன்னைவெளியே போய்வரவிட்ட உன்னைப் பெற்றவர் மீதும் குற்றமில்லை. மதங்கொண்ட யானை நீர்த் துறைக்கு வரும்போது பறையறைந்தே வருதல் வேண்டும் என்று விதிசெய்ததுபோல் உன் வரவை அறிவிக்கவேண்டுமென்று சட்டமிடாத இந்த நாட்டு மன்னனே தவறுடையான்’ எனக் கூறினான்.

அந்தப் பாடல் இது:
நீயும் தவறில்லைநின்னைப் புறங்கடை
போதரவிட்டநுமரும் தவறிலர்
நிறையழிகொல்யானைநீர்க்குவிட்டாங்கு
பறையறைந்தல்லதுசெல்லற்கஎன்னா இறையேதவறுடையான்
(குறிஞ்சிக் கலி- 20)

இவ்வாறு மன்னன்மீதே தவறென ஒரு தலைவன் உரைக்க, இன்னொரு தலைவன் இன்னொரு பாடலில், ‘ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை’ என்று தண்டனைக்குரிய தவறுசெய்தவர் யாரென்பதைக் கூறுகிறான். தலைவியைச் செல்வச் செழிப்புடன் வளர்த்து அவளுக்குச் செல்வச் செருக்கைக் கொடுத்த பெற்றோரே தவறுடையவர் என்றும், எனவே  தான் ஒறுப்பதானால் தலைவியின் பெற்றோரையே  ஒறுப்பேன் என்றும் அவன் உரைக்கின்றான்.

இந்த இரு தலைவர்களில் ஒருவன் மன்னனைத் தவறுடையவன் எனக் கூறுகிறான். இன்னொருவன் தலைவியின் பெற்றோர் தவறுடையர் எனக் கணிக்கின்றான். காதல் கைகூடாமையே இவர்கள் தவறுகண்டுபிடிக்கக் காரணமாயமைகின்றது. இவ்வாறு வருகின்றபாடல்கள் கைக்கிளைஎன்னும் திணையின் பாற்படும் என  தமிழ் இலக்கியமரபு  செப்புகின்றது.

000

ஈழநாடுவாரமலர்,18.03.1969

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்