கலித்தொகைக் காட்சி: 5
‘குடும்பதத்துவத்தை விளக்கும்
பாலைநிலத்து யானைகள்’
தலைவனைப் பிரிந்ததலைவியர் ‘அறன் இன்றி அயல் தூற்றும்’ நிலையில் மாத்திரமல்ல, சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்று நடுவீதியிலே கிடப்பவர்களாகவும் கூட ஆகிவிடுகின்றனர். பெண்மை மென்மையானதாகவும், ஆண்மை வன்மையானதாகவும் இருக்கின்றவேளையில், மென்தன்மையுடைய பெண்ணுக்கு ஆணே பாதுகாப்பளிக்க வருகின்றான். இந்நிலையில் தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை ஆதரவற்றதாவதில் ஆச்சரியமில்லை.
‘தோள்நலம் உண்டுதுறக்கப்பட்டோர்
வேணீர் உண்டகுடைஓர் அன்னர்,
நல்குநர் புரிந்துநலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர்,
கூடினர் பிரிந்துகுணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர்’
என்று கலித்தொகையின் இருபத்திரண்டாம் செய்யுள் கூறுகிறது.
ஆம், தலைவனைப் பிரிந்த தலைவியர் நீர் அருந்திய பின் வீசப்பட்ட ஓலையில் முடைந்த பாத்திரமாகவும், மக்கள் பிரிந்துவிட வெறிச்சோடிக் கிடக்கும் பாழ்பட்டகிராமமாகவும், வெளியே வீசப்பட்ட வாடிய மாலையாகவும் கணிக்கப்படுவர். அந்த நிலையில் பயனற்று, வெறுத்து, நல்ல தன்மையிழந்து கிடக்கும் அந்தநிலையை, நாம் பார்க்கிறபோது, தலைவியரின் வாட்டம் நன்குபுரியும். வாடிய மாலையை யாரும் தீண்டுவதில்லைப்போல் இவர்களும் சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாக வாழவேண்டிவரும்.
இவ்வளவையும் நினைந்த தலைவி தன்னைப் பிரிந்துசெல்லத் துணிந்துவிட்ட தலைவனின் செலவைத் தடுத்துவிட முயற்சிக்கிறாள். தன்னால் இயன்றவரை தன் பரிதாபநிலையை விளக்குகின்றாள்.
“நீஎன்னைப் பிரிந்துசெல்லுகின் ற பாலைநில வழியிலே மரத்திலே சுற்றிப் படர்ந்தகொடி வாடியிருப்தையும், நீர் அற்றுப்போய் விட்ட குளத்திலே வாடிக்கிடக்கின்ற அணிமலர்களையும் காண்பாய். அவையெல்லாம் என்னைப்போல உருவுகொண்டு வந்து உன்னை இடைவழியிலேயே தடுத்துவிடும். அதனால் செல்லுகின்ற வினை முற்றாது நீதிரும்பிவரவேண்டிய நிலையும், அப்படித் திரும்பிவருவதால் ஊரிலே ஏற்படக்கூடிய அவச் சொல்லைச் சந்திக்கவேண்டிய நிலையும் வரும். எனவே உன் செலவைத் தடுத்து பிரிவுத் துயரினால் வாடவிருக்கும் என்னைக் காப்பாற்று.”
இவ்வாறு பலவும் கூறியும் தலைவனைத் தடுக்கமுடியவில்லை. தடுக்கமுடியவில்லை என்பதால் விட்டுவிட முடியுமோ? துயருழப்பவள் தலைவியன்றோ? எனவே எப்படியாவது தடுத்துவிடுவதே என்ற தீர்மானத்துடன் மீண்டும் தொடர்ந்து சொல்கிறாள்.
இதுவரையும் அவளுடைய கூற்றிலே பிரிவினாலேற்படக்கூடிய அவளது துயரையே காணக்கூடியதாக இருந்தது. இப்போதோவெனில் இந்தப் பிரிவினால் தலைவனே வருந்தக்கூடிய நிலையும் உருவாகும் என்று கூறுகிறாள்.
பாலைநில வழியிலே காதலரைக் காணமுடியாது. ஆனால், காதல் உணர்வு மேலிட்ட மிருகங்களைக் காணமுடியும். அந்த மிருகங்கள் தம் அன்புணர்வைக் காட்டி பிரிவுத் துயரை தலைவனும் அடையுமாறு செய்துவிடும் என்பதாகக் கூறுகின்றாள்.
“ ‘அன்புகொள் மடப்பெடைஅசைஇய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு’என்றும், ‘இன்னிழல் இன்மையால் வருந்திய மடப்பிணைக்கு தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலை’ என்றும் தலைவ நீயே முன்பு கூறியிருக்கிறாய். மேலும், ‘துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு’ என்றும் சொல்லியிருக்கிறாய். இந்தவழியில் நீ செல்லும்போது இத்தகைய காட்சிகளெல்லாம் உன் துணையைப் பிரிந்த பிரிவுணர்ச்சியைத் தூண்டுமே. மிருகங்களுக்குள்ள காதலுணர்வு மனிதர்களுக்கற்றதேனோ? தம்மை வருத்திக்கொண்டு இவை தம் துணைக்கு இன்பம் கொடுக்கின்றன. நீயோ உன்னையும் என்னையும் வருத்திக்கொண்டு பிரிந்துபோக விரும்புகிறாய். பிரியாமல் இருந்து எம் இருவருக்குமே இன்பம்செய்ய மாட்டாயா?” என்று கேட்டாள்.
தலைவியின் இந்தவேண்டுகோளுக்கு தலைவன் இணங்கினானோ இல்லையோ, அதுவேறுவிஷயம். ஆனால், ‘துடியடிக் கயந்தலை கலக்கிய’ என்று வரும்அடிகள் குடும்பம் என்னும் வார்த்தையின் பெரிய தத்துவத்தையே விளக்கிவிடுகின்றன.
குட்டி யானை,பிடி ஒன்று,தலைவனான களிறு ஒன்று. ஆக மொத்தம் மூன்று பேரைக்கொண்ட சிறிய குடும்பம் அது. பாலைநிலத்திலே நீரைத் தேடி அலைந்த அந்த மூன்று யானைகளும் ஓரிடத்தே சிறிய நீரைக் கண்டன. கண்டதும் நடை தளர்ந்து, மெய் தளர்ந்து நின்ற யானைகள் முந்திவந்து நீரை எடுக்க நினைக்கவில்லை. முதலில் குட்டியானையைப் பருக விடுகின்றன. ‘துடியடிக் கயந்தலை கலக்கிய’ என்பதிலிருந்து குட்டியானையே முதலில் குடித்தது என்பது புலனாகிறது.
அடுத்து நீரருந்திய யானை பெண் யானையே. தன்னுடைய துணை அருந்தும்வரை காத்திருந்து அதன் பின்னரே ஆண் யானை நீரருந்துகிறது. இதை, ‘பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு’ என்ற அடி தெளிவாகக் காட்டுகின்றது.
000
ஈழநாடுவாரமலர், 01.02.1969
Comments