அல்பேர் காமு

அல்பேர் காமு:
தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை

1


அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது.

வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்களென பலராலும் புரிந்தும் புரியாமலுமே அவர் இருந்திருக்கிறாரோ என்று பிறகு பட்டது. ஒரு புதிய ஆர்வத்தின் காரணமாய்க்கூட எனது எண்ணம் இப்படி மிகைபடத் தோன்றியிருக்கலாம் எனக் கொண்டாலும், ‘பெரிதாக இல்லை’ என்னும் அளவுக்காவது அந்நிலைமைகள் இருப்பதை தீர்க்கமான சிந்தனையின் பின் என்னால் வந்தடைய முடிந்தது.

அல்பேர் காமுவின் வாழ்நாள் அதிக காலமில்லை. 1913 இல் அல்ஜீரியாவில் பிறந்த காமு, பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து, பின் அமெரிக்காவில் குடியேறி 1960 ஜனவரி 4இல் ஒரு விபத்தில் மரணமாகும்வரையான நாற்பத்தேழு ஆண்டுகளே இவ்வுலகில் இருந்திருக்கிறார். பிரான்ஸில் வாழ்ந்த காலத்திலேயே அவரது பல்வேறு இலக்கிய, சித்தாந்த, அரசியல் ஆளுமைகள் வெளிப்பட்டிருப்பினும், பிரான்ஸின் சமகால இலக்கிய, சித்தாந்த, நாடக ஆளுமைகளுக்கு இணையாக அவர் இருந்திருந்தார் என்பது, சாமான்யமானதில்லை. பிரான்ஸிய இலக்கிய விமர்சகர்களாலேயே ‘Representative of non-metropolitan French Literature’ என்று கூறப்படும்படியான தகைமையை அவர் கொண்டிருந்திருக்கிறார்.

அமெரிக்காவில் காமுவின் இலக்கிய ஆளுமையை, ‘அமெரிக்கர்கள் இலக்கியத்தை ஓர் இரண்டாம் பட்சச் செயலாகவே கருதும் இயல்புகொண்டவர்கள். கலைகளில் சொற்பத் தொடர்புகொண்டவர்கள் இவர்கள். இவ் அமெரிக்கரிடையே வேறு எந்த அந்நிய எழுத்தாளரும் இவ்வளவிலான உணர்வுகளை உண்மையில் எழுப்பியிருக்க முடியாது’ என்றும், ‘பிரான்ஸின் குடிமகனாய் இருந்துகொண்டே அமெரிக்காவில் மற்றவர்கள் கூறிட நடுங்கியதை காம்யு தைரியமாக எடுத்துக்கூறினார்’ என்றும், ‘அமெரிக்க இலக்கியம் காத்திருந்து ஏங்கியும் கிடைக்கப்பெறாத ஓர் எழுத்தாளராக காம்யு விளங்கினார்’ என்றும் நான் மேலே குறிப்பிட்டுள்ள அவரின் மரண இரங்கற் செய்தியில் செர்ஜி துப்ரோவ்ஸ்கி கூறியதிலிருந்து உய்த்துணர்ந்துகொள்ள முடியும்.

புலம்பெயர்தல் என்பது எதன் பொருட்டாகவும் இருந்திருக்கட்டும், ஆனால் அதிலுள்ள பெயர்தலெனும் செயற்பாடு, மண்ணைவிட்டு வேரொடு பெயர்தல் என்கிற மகத்தான வன்முறையின் கொடுமுடியாகும். தனது இருபத்தைந்தாவது வயதில் சொந்த மண்ணைவிட்டு பிரான்ஸ் பெயரும் அல்பேர் காமு, அங்கிருந்தும்தான் அமெரிக்கா பெயர நேர்வதும், செல்லுமிடங்களிலெல்லாம் இலக்கியம், தத்துவம் சார்ந்து கியாதி பெறுவதும் துயரங்களைச் சகித்துக்கொண்டும் நிகழ்த்தப்படும் சாதனையாகும். தளராத உறுதியும், தன்னம்பிக்கையும், கூர்த்த அவதானிப்பும் இல்லையேல் பெயர்த்து நடப்பட்ட மண்ணிலேயே உலர்ந்து சருகாகிவிடக்கூடிய செடியாக வாழ்க்கை ஆகிவிடக்கூடிய சாத்தியங்கள் மலிந்திருந்தன அதில். ஆனால் காமு சென்றவிடங்களிலெல்லாம் தன் பேராளுமையின் சுவடுகளைப் பதியவைத்தார்.

நானுமே ஒரு புலம்பெயர்வாளனாய் இருப்பதில், அல்பேர் காமுவின் பேராளுமைகள் என்னை வியக்க வைப்பன.

‘It is not the struggle which makes us into artists, but the art which compels us to join the struggle’. அல்பேர் காமுவே சொன்ன வாசகம்தான் இது. அவர் எழுதிய ‘The Witness for Liberty’ என்ற அவரது நூலில் வருகிறது. அதற்கேற்பவே அவரின் எழுத்துலக வாழ்க்கை இறுதிவரை இருந்திருப்பதாகக் கருதமுடியும்.

காமுவை ஓர் இலக்கியவாதியாய், அரசியல்காரனாய், அரங்காடல் பிரதிகாரனாய் என பல்தளங்களில் இனங்காண முடியும். ஒட்டுமொத்தமாய் அவரது ஆக்கங்கள் அனைத்தையும் ஒரு பார்வைக்குட்படுத்துவோமானால், அப்போது தெரிய வரும், முதன்மையாக அவர் ஓர் இலக்கியவாதியாகவே இருந்திருந்தார் என்பது. அவரது அரசியல் நிலைப்பாடு இலக்கிய நிலைப்பாட்டின் அடுத்த தளமாகவே என்றும் இருந்திருக்கிறது.

Alger Republicain என்ற இடதுசாரிப் பத்திரிகையில் வேலை செய்திருந்தாலும், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் குடியரசு சார்பானவராக இருந்திருந்தபோதும் அவரது எழுத்துக்கள் இலக்கியத்தைநோக்கியும், சித்தாந்தத்தைநோக்கியும் நகர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. 1936-1942க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிவந்த அவரது கட்டுரைகளின் தொகுப்புகளான Betwixt and Between, Nuptials என்ற இரண்டு நூல்களும் தனிமனித அனுபவங்களான மரணம், வறுமை, நோய், இயற்கை பற்றியனவாகவே இருந்திருப்பதிலிருந்து அவரது எழுத்தின் செல்நெறி தெரியவருகிறது.

பிரான்ஸின் அதிகாரத்தின் கீழிருந்த அல்ஜீரிய நாட்டில் உலகப் போரும், உள்நாட்டு விடுதலை யுத்தமும், பசி பட்டினி நோய்கள் என்று பெருவாரியான மக்களை தற்கொலைநோக்கி விரட்டிக்கொண்டிருந்த நிலையிலும், பிரான்ஸின் முக்கிய இலக்கிய ஆளுமையான அல்பேர் காமு, இவைபற்றி தன் எழுத்துக்களில் மேலெழுந்தவாரியான பிரஸ்தாபங்களுக்கு மேல் எதையும் செய்துவிடவில்லையென்பது ஒரு முக்கிய குறைபாடாக அவர்மேல் சுமத்தப்படுவதுண்டு. ஒரு நாட்டின் பெருவாரியான மக்கள் போரினதும், வறுமையினதும் கொடுமையினால் சுயஹத்தி நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருந்த தருணமொன்று ஒரு படைப்பாளியிடத்தில் அவனது இலக்கியத்துக்கான மகத்தான உந்துசக்தியாக வெளிப்பட்டிருக்கவேண்டும். ஆனால் காமுவோ, ‘அந்நியன்’ (1942) என்ற தன் நாவலில் வரும் Maursault கதாபாத்திர மாதிரியில் Indifferent of politics as well as love, ambition and friendship  என விமர்சகர்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் இருந்திருக்கிறார்.  the Stranger, The Myth of Sissyphus (1943) ஆகிய நூல்கள் இரண்டிலும் திட்டமுடனேயே  காமு அறம் சார்ந்த, சமூகம் சார்ந்த விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறார் என்பது அவர்கள் சுமத்துகிற மேலுமான குற்றச்சாட்டுகளாகும்.

அவரது கம்யூனிச எதிர்ப்பும் பிரபலமானது. தனிமனித சுதந்திர ஈர்ப்பு என்கிற தளத்திலிருந்து நோக்கினால், அவரது பாசிசம்மீதான தாக்குதல் தீவிரமானதாக இருந்திருக்;கவேண்டும். ஆனால் தம் காலத்து ஏனைய படைப்பாளிகள் பலரைப்போல காமுவும் இத் தாக்குதலில் அதிக நேரத்தைச் செலவிடவில்லை. 1940இன் பின்னர் மிகச் சிறு அளவிலான அறிவுஜீவிகள் பாசிசம் பக்கம் சார்ந்ததன் (உதாரணமாக எஸ்ரா பவுண்ட்) நிலைமையின் பிரதிபலிப்பாக இதைக் கொள்ளமுடியுமோ என்ற ஒரு சரியான கேள்வியும் நிமிர்ந்து இங்கே நின்றுகொண்டு இருக்கிறது. இதன் காரணமாகவே சார்த்தருக்கும் காமுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டதையும் இங்கு சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

1935இல் அல்பேர் காமு அல்ஜீரிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவது அவரது வாழ்வில் ஒரு கட்டமாகவே அமைந்துவிடுவது தெரிகிறது. இன்னும் அச்சொட்டாக ஒரு காலத்தைக் கணிப்பதானால் இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கிய காலத்தைக்கூட இங்கே எடுத்துக்கொள்ள முடியும். இக்காலகட்டத்தில் காமுவின் நிலைப்பாடு ‘Each man had the duty to see that the integrity of his neighbors' personality was respected’ என்ற தனிமனிதவாதத்தின் தளம் நோக்கியதாகவே இருந்திருக்கிறது.

போருக்குப் பின்னால் இது இன்னும் அதிகமானதாகவே கருதமுடிகிறது.
1942இலிருந்து பிரான்ஸின் எதிர்ப்பாளர் அணியில் இருந்திருக்கிறார் அல்பேர் காமு. இது டுநவவநசள வழ ய புநசஅயn குசநைனெ என்ற 1942இல் இரகசியமாக வெளிவந்து 1944இல் மறுபடி பிரசுரம் கண்ட நூலிலிருந்து தெரிகிறது. இதுவே பின்னால் வெளிவந்த நான்கு அரசியல் நிலைப்பாட்டு நூல்களுக்கும் தூண்டுதலாக அமைகிறது. 1) The Plaque  2) State of Seige 3) The Just Assassin 4) The Rebel ஆகிய அந்த நான்கு நூல்களிலும்கூட எல்லா சட்டதிட்டங்களையும் நிராகரிப்பதையோ, சமூகத்தை நசிக்கும் சக்திகளுக்கெதிராக தீவிரமான புரட்சியில் இறங்குவதையோ இதில் வரும் சொற்கள் ஆதரிப்பதாக அர்த்தமில்லையென்று விமர்சகர்கள் கருதுகிறார்கள். மேலும் அவரது அரசியல் சார்பு என்பதுகூட பாசிசம் ஐரோப்பாவில் மங்க ஆரம்பித்த பின்னரே சூடு கொள்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டும். இந்தச் சமயத்தில்தான் அவரது கம்யூனிஸத்துக்கு எதிரான நிலைப்பாடும் தீவிரமாவதைக்கொண்டு அல்பேர் காமுவின் மனநிலை சார்ந்த கருதுகோள்களை நாம் கண்டுகொண்டாகவேண்டி இருக்கிறது.

லூயி ஆரகன், போல் எலுவார்ட், பிக்காசோ, றோஜர் வையான்ட் போன்றோர் பிரான்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாகவும், சார்த்தர் மற்றும் மார்டன் அரங்க குழுவினர் கம்யூனிஸத்துக்குச் சாதகமாகவும் இருந்த வேளையில், அல்பேர் காமுவின் கம்யூனிஸத்துக்கு எதிரான மனநிலை சிந்திக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் கம்யூனிஸமானது இரண்டு தேசிய அடையாளங்களிலிருந்து, முதலாவது: ஜேர்மனியின் ஹெகலியனிஸம், இரண்டாவது: ரஸ்யாவின் நிகிலிஸம், உருவானதென்றார். Denial of all morals நிகிலிஸத்தின் அடிப்படையாக இருந்தது. நிகிலிஸத்தின் சகல அறம்சார் அம்சங்களினதும் நிராகரிப்பு, ஒருவேளை காமுவின் கம்யூனிஸ மறுப்புக்கான உந்துதலை ஏற்படுத்தியிருக்க முடியுமோ என்பதும் சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.
அபத்தம்   என்கிற இலக்கிய சிந்தனையின் மூலகர்த்தாவான அல்பேர் காமு, வாழ்வின் மரணம், நோய், புத்தி மாறாட்டம் போன்ற அம்சசங்களை ஆரம்பத்தில் தன் எழுத்துக்களில் அழுத்தமாய்த் தெரிவித்துவந்தாலும், தி மித் ஒப் சிசிபஸ் நூலின் வெளியீட்டுக்குப் பின்னால் அத் தீவிரத்தை இழந்துபோகிறார் என்பதை அல்பேர் காமுவின் படைப்புகள் குறித்தான விமர்சனங்களிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அபத்த சிந்தனைகள் அதிகமாகவும் வெளிப்பட்ட நூல் இரண்டாம் கட்டுரைத் தொகுப்பான Nuptials என்பதாகவே இருக்கிறது. அதன் பின்னால் அபத்தத்தின் செல்வாக்கிலிருந்து அவர் மீள்கிறார் என்பதைவிட, என் வாசிப்புக்களிலிருந்து நான் அடையக்கூடிய ஒரு முடிவு, காமு அபத்தத்தையும் மனிதாபிமான தளத்துக்கு உயர்த்துவதாய் ஆகியதுதான் என்றே ஆகிறது.
இருத்தலியலின் மூலவர்களில் ஒருவராகவும் காமு குறிப்பிடப்படுகிறார். வாழ்வின் விகாசத்தையும், அதன் அழகையும் எடுத்துக்காட்டி தற்கொலையைக் கண்டித்த ஒரு சிந்தனாவாதி மொத்த மனித குலத்துக்குமான மனிதாபிமானத்தை வற்புறுத்துவதில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்டியதற்கு காமுவைவிட்டால் வேறு பேர் இல்லையென்றே கூறிவிடமுடியும். ஆயினும், ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், ‘நான் ஒரு இருத்தலியல்வாதி இல்லை. சார்த்தரும் நானும் எங்களது பெயர்கள் இருத்தலியல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு பலவேளைகளிலும் ஆச்சரியமே பட்டிருக்கிறோம்’ என்கிறார்.

ஆகவே அபத்தத்தின் ஆதிகர்த்தாவான அல்பேர் காமு பின்னாளில் அதன்மீதான ஆதர்~ம் குறைந்ததும், தான் ஒரு இருத்தலியல்வாதியல்ல என்று பகிரங்கப்படுத்துவதும் கொண்டு நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடிகிறது. அவரது தீவிரமான இலக்கிய இயங்குதளமே இதற்கான காரணமென்பதைச் சொல்லவேண்டியதில்லை. இன்னுமொன்று. தீவிர மனிதாயத தளத்தில் சிந்தனையைச் செலுத்தியிருந்த காமு, கம்யூனிஸ சித்தாந்தத்தின்படி கொள்ளப்படும் வர்க்க பேதத்தையும் மறுத்தது என்று கொள்வதில் பெரிய மாறுபாடுகளில்லை.

1947க்கு மேலே அவரது கவனம் முழுவதும் தீவிரமான இலக்கியத்திலேயே செறிந்திருந்ததை நம்மால் அவரது தொகுப்புகளையும், நூல்களையும் கொண்டுகூட அறிய முடியும்.

The Fall (1956), Exile and the Kingdom(1957) ஆகிய படைப்புக்கள் மிக்க இலக்கியார்த்தமானவை. ‘the Fall is a long monologue, a confession, a methodical introspection’ என்பது தி போஃல்  விமர்சகர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

1957இல் உப்சலா பல்கலைக்கழகத்தில் டால்ஸ்டாயின் ‘கலை என்றால் என்ன?’ என்ற நூலின் ஞாபகார்த்தமாய் நிகழ்த்தப்பட்ட அல்பேர் காமுவின் உரை பின்னால் ‘The Artist and His Time’ என்ற நூலாக வெளிவந்தது. எழுத்து பற்றி காமுவின் சிந்தனை எவ்வாறு இருந்ததென்பதை துல்லியமாகக் காட்டுவதாக அதிலுள்ள ஓரிரு வரிகளே அமைந்துவிடுகின்றன. ‘The only justification is to speak up for those who can not do so’ என்று தெரிவிக்கையில், நலிந்த மக்களின் குரலாக எழுத்து இருக்கவேண்டும் என்ற அவரது கருத்து வெளிப்பாடடைகிறது.

இவ்வாறாக சிறுகதை, அரங்காடல் பிரதியாக்கம், நாவல், கட்டுரைகள் என பல்வேறு கலைத் துறைகளிலும் ஆழமான சுவட்டினைப் பதித்து 1960 இல் ஒரு விபத்தில் மறைந்துபோகிறார் அல்பேர் காமு. The Fall, The Stranger, Exile and the Kingdom, Caligula, A Happy Death, The Aduterous Woman, The Growing Stone, The Possessed, Requiem for a Nun போன்ற முக்கியமான நூல்கள் அவரின் ஞாபகங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன.

இந்த இடத்தில் ழீன் போல் சார்த்தரின் காமுவினது மரண அஞ்சலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றினைக் காண்பது பொருத்தமானது. அதில் சார்த்தர் கூறுகிறார், ‘காம்யுவை கொன்ற விபத்தை ஒரு மாபெரும் ஊழல் என்றே நான் அழைக்கிறேன். ஏனென்றால் இவ்விபத்து மனித உலகின் மையத்தைநோக்கி நமது அடிப்படைக் கேள்வியான அபத்தத்தை முன்னிறுத்துவது. தனது இருபதாம் வயதில் மனிதனை மறுக்கும் அபத்தத்தைக் கண்டுபிடித்தார் காம்யு. அதனுடன் பழக்கமானார். அதனது தாங்கொணாத நிலையை எண்ணிச் சிந்தித்தார். அதன் வழியைப் பின்பற்றினார். இருப்பினும், அவரது படைப்புகளால் மட்டும்தான் அவரது வாழ்க்கைபற்றிய உண்மைகளைத் தீர்க்கமாகச் சொல்லமுடிந்தன’ என.

ஆம், அவரது படைப்புகளே இன்று அல்பேர் காமு என்கிற படைப்பாளியை, அவரது சிந்தனைப் போக்கினை, தத்துவார்த்த நெறியினை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

காமு வலியுறுத்தி வந்த மனிதாபிமானம், திடீரென்று அவரைப் பறித்துச் சென்ற மரணத்தின் மீதும் மனிதாபிமானம் கொண்டதாகும் என்ற சார்த்தரின் வார்த்தைகளில் மெய்யிருக்கிறது.

0

காற்றுவெளி மிஞ்சிகை,  நவ. 2013

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்