கலாபன் கதை 3



கடலில் தொலைந்த ஒருநாள்



அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை.

காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான்.

ஒரு முன்னிராப்போதில் கப்பல் அமெரிக்காவின் கல்வெஸ்ரன் துறைமுகத்தை அணுகி நங்கூரமிட்டது. எட்டு-பன்னிரண்டு மணிநேர என்ஜின் றூம் கடமையிலிருந்த கலாபன், கப்பல் நங்கூரமிட்டு அது நிறுத்தப்படுவதற்கான ஆரவாரங்களெல்லாம் முடிய பத்து மணிபோல் மேலே வந்தான். சியாட்டில், லொஸ் ஏஞ்சலெஸ், சான்பிரான்சிஸ்கோ, நியூவார்க் என்று பிரபலமான அமெரிக்கத் துறைமுகங்கள்பற்றிக் கேள்விப்பட்டிருந்தவன், கல்வெஸ்ரன் என்ற ஓர் அநாமதேயத் துறைமுகத்தை அடைவதில் பெரிய பரபரப்பைக் கொண்டிருக்கவில்லையென்றாலும், அதுவே அவனது முதல் அமெரிக்கத் தரிசனம் என்ற வகையில் இயல்பான ஓர் ஆர்வம் அவனை அவ்வாறு மேலேவரச் செய்திருந்தது. மெயின் என்ஜின் நிறுத்தப்பட்டுவிட்டதால் இனி மின்சாரம் வழங்குவதற்கான ஜெனரேட்டர்கள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். கலாபனுக்கு பெரிய வேலை அந்த நேரத்தில் இல்லை. இனி பதினொன்றரை போல இறங்கி, எண்ணெய் விட்டு, நீர் மற்றும் எண்ணெய் ஆகியனவற்றின் வெப்பம், அழுத்தம் முதலியவற்றை அறிக்கையேட்டில் பதிந்துவிட்டு வந்தால் போதும்.

பின்புறத் தளத்துக்கு வந்தவன் வீசிய குளிர்காற்றில் உடல் சில்லிட சுத்தமான காற்றின் சுவாசிப்பில் சுகித்து சிறிதுநேரம் நின்றுவிட்டு கரைநோக்கிய திசையில் பார்வையை எறிந்தான். துறைமுகம் இன்னும் தூரத்திலேயே இருந்தது. வரிசையான விளக்கு வெளிச்சங்கள். அதன் சமாந்திரத்தில் இன்னுமொரு வெளிச்சப் புள்ளி வரிசை. அது அசைந்துகொண்டிருந்தது. பெருவீதியொன்றின் வாகனப் போக்குவரத்துத்தான் அது என்பதை அனுமானிக்க கலாபனுக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. அவ்வெளிச்ச வரிசைகளிடையில் தெரிந்த சிகப்பு நீல மஞ்சள் நிற ஒளிப்புள்ளிகள் மனத்தை கிளுகிளுப்படையச் செய்தன. அவை மது, மாது, நடனங்களின் குறியீடுகள். கடலோடிகளுக்கு மட்டுமாவது. ஆயினும் இனி மனக்கட்டுப்பாட்டோடு இருக்க அவன் ஏற்கனவே முடிவுசெய்திருந்ததில் பெரிதாகக் கிளர்ந்து அது எம்.வி.ஜோய்18 கப்பலில் வேலைசெய்த காலத்தில்போல் அட்டகாசம் செய்யவில்லை.

சிறிதுநேரம் அவ்வாறே நின்றிருந்திருந்தவனின் பார்வை ஒரு விசித்திரத்தை அப்போதுதான் இனங்கண்டது. கரை உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிக்கொண்டிருந்தது. கப்பல் வாழ்வின் அனுபவம் அவனுக்கு வெகுவாக இல்லையெனினும், அந்த இரண்டு மூன்று வரு~ங்கள் கப்பலின் மேல்கீழானதும், பக்கப்பாடுகளிலானதுமான அசைவுகளுக்கு அவனைப் பழக்கப் படுத்தியிருந்தன. அதனால் கப்பலின் அசைவுகளை உணர்தல் அரிதாகி, பார்க்கும் வெளியே அசைவதுபோன்ற பிரமையுறுதல் இயல்பில் வாய்த்திருந்தது. அசையும் பொருளை அசைவற்றதாய் நினைத்து அசையாப் பொருளின் அசைவை அனுபவிக்கும் அந்த மாயத்தின் கணங்கள் அவனுக்குப் பிடித்தமானவை.

பயண காலத்தில், அதாவது மெயின் என்ஜின் வேலைசெய்யும் பொழுதுகளில், ஓர் என்ஜினியரோடு அவன் வேலைசெய்யவேண்டி இருக்கும். நான்கு மணிநேர வேலைக்குப் பிறகு எட்டு மணிநேர ஓய்வு என இரவும் பகலுமாக இருந்த அந்த வேலைநேரப் பகுப்பு, நாள் முழுவதும் வேலைசெய்வதுபோன்ற அலுப்பைச் செய்ததெனினும், அது ஒரு நேரத்தின் விரைவுக்கூற்றினைக் கொண்டிருந்ததையும் அவன் அறிந்திருக்கிறான். அதுவே அவ்வேலைப் பகுப்பின் முக்கியமான அலகு அல்ல. என்ஜின் அறை, செல்லவேண்டிய இடத்தைத் துல்லியமாக பாகைவாரியாகக் கண்டு செலுத்துவதற்கான பிறிஜ் எனப்படும் உச்ச தளம் ஆகியனவற்றில் உள்ள வேலைகள் கூடுதலான கவனத்தைக் கோருபவை. அதிகூடுதலான வெப்பசக்தியை கொதிநிலை எண்ணெய்க் கசிவுகளின் மத்தியில் பிறப்பிக்கும் கீழேயுள்ள என்ஜின் அறை வெகுவான தருணங்களில் தன் தீ நாக்குகளை சட்டெனப் பரப்பி கப்பலையே எரிபொருளாக்கிவிடும் அபாயம் இருந்தது. அதுபோல் மேலே சுக்;கான் அறையில் இருக்கக்கூடிய கவனப்பிசகில் தரைவழியின் வாகன விபத்துக்கள்போல் கடலிலும் கப்பல்களின் மோதுகைகள் நிகழக்கூடும். மேலும் கடலில் தலைதூக்கி நின்றிருக்கும் குன்றுகள் கப்பலின் அடித்தளத்தையே கீறிச் சிதைத்து அதனை கடலுள் அமிழ்த்திவிடும் அபாயமும் இருந்தது. இரவில் சுக்கான் தளம் வெளியின் இருளையெல்லாம் தன்னுள் வாரியபடி இருண்டுபோயிருக்கும். இருளினுள்ளிருந்து எதிரே வெளிச்சப் புள்ளி ஏதாவது தெரிகின்றதா என்ற கப்பல் அதிகாரியினதும் கூடப் பணிசெய்பவரினதும் அவதானிப்பின் மும்முரமே மறுநாள் கப்பலின் இருத்தலையே உறுதிசெய்யும். அது பிழைக்கிறபோது விபத்துக்கள் தவிர்க்கப்பட முடியாதவை. அவ்வாறு பல விபத்துக்களைக் கடல்வர்த்தக வரலாறு தன்னுள் கொண்டிருப்பதை தான் புரட்டும் அயல்மொழிச் சஞ்சிகைகளிலிருந்து கலாபன் நிறையவே அறிந்திருக்கிறான். அதனால் பகலில் நான்கு, இரவில் நான்கு மணியான வேலைப் பகுப்பு அவனுக்கு உடன்பாடாகியிருந்தது.

மறுநாள் அதிகாலையிலேயே என்ஜின் தயாராக்கப்பட்டது. துறைமுக பைலட் வந்ததும் கப்பல் துறைமுகத்துள் நுழைந்தது. சிறிதுநேரத்தில் கப்பலும் பெருவடங்களில் பிணைக்கப்பட்டாயிற்று. வெளியே காத்திருந்த ஏஜன்ற் உள்ளே வந்ததும் கடிதங்களும் பணமும் பெறும் ஆரவாரம் மாலுமிகளிடையே வெகுத்து, கடிதத் தகவல்களின் துக்கமோ மகிழ்ச்சியோ விளைத்த உணர்வுக் கோலங்களுக்கான போதைகொள் சடங்குகள் ஆரம்பமாகி மதியத்தின் மேல் அவையும் அடங்கின.

கலாபன் தன் மனைவியின் கடிதத்தோடு வந்திருந்த மகளின் பிறந்தநாள் படங்கள் விளைத்த மனக்கிளர்ச்சியோடு பிற்பகலைக் கடத்தினான். ஆறு மணியளவில் நகரைப் பார்த்துவர, எடுத்திருந்த சிறிய தொகையோடு சென்றான். கப்பல்காரர்களைத் தேடி விரிந்த சில வெண்நங்கையரின் பார்வைகளை அநாயாசமாக விலகிக்கொண்டு ஒரு சிவப்பு விளக்குகள் சிறப்புற விரிந்துகொண்டிருந்த எக்சலென்ற் என்று எதிரே தென்பட்ட ஒரு பாருக்குச் சென்றான் கலாபன்.

வாசலில் நின்றிருந்த ஒரு பணிப்பெண் உள்ளே குடிவகைகளின் விலைப்பட்டியலைக் காட்டிக்கொண்டிருந்தாள். ஒரு பியர் மூன்று டொலர்களா என அதிர்ச்சி விளைந்தாலும், அமெரிக்காவிலும் ஒரு பாரில் குடித்ததாக ஒன்றிரண்டு பியர்களோடு திரும்ப எண்ணிக்கொண்டு, புகையும் இசையும் சத்தமும் உரசல்களும் நிறைந்திருந்த அந்த பாரினுள் நுழைந்தான்.

ஒரு பியர் போத்தலை வாங்கிக்கொண்டு தூர ஓரிடமாய்ச் சென்றமர்ந்தான். ஒரு பக்கத்தில் தலையுயரத்துக்கு மேலேயுள்ள ஒரு திரையில் 8எம்.எம். புரஜெக்டர் ஒன்று புணர்ச்சியின் உச்சகட்ட இயக்கத்தை விரகம் மேவும் சத்தத்துடன் விரிய விட்டுக்கொண்டிருந்தது.
அங்கிருந்து வெளியேற கலாபன் தன்னுடன் ஒரு யுத்தத்தையே நடத்தவேண்டியிருந்தது. மூன்று பியர்கள் முடிகிறவரையில் அந்த யுத்தத்தில் அவன் வென்றான். வெளியே வந்தவன் மகளுக்காக விலைகூடியதானாலும் ஒரு சட்டை வாங்கிக்கொண்டு வேலைநேரத்துக்கு முன் கப்பலுக்குத் திரும்பினான்.

மறுநாள் மாலையில் கப்பல் பயணப்படுவதாக இருந்தது. பயணம் மீண்டும் தூரகிழக்கு.
மதியத்தில் கலாபன் வேலை முடிந்து மேலே வந்தபோது சாப்பாட்டு அறையில் ஒரு துறைமுகத் தொழிலாளி செக்ஸ் படப் புத்தகங்கள், போட்டோக்கள் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு டொலருக்கு விற்கப்பட்ட ஈரடிநிலை நங்கையரின் போட்டோக்களில் இரண்டை நண்பர்களுக்கு அனுப்பும் எண்ணத்தோடு அவன் வாங்கிக்கொண்டான். அவசரமாக தபால்நிலையம் போகவிருந்த ஒரு நண்பன் மூலம் மனோவுக்;கான கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. காமவிழைச்சலிலிருந்து அந்தமுறை தன்னைக் காத்துக்கொண்டது கலாபனுக்குச் சந்தோ~மாக இருந்தது.

கப்பல் மாலையில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. மீண்டும் மலே~pயா என்று பேச்சாக இருந்தது.

கப்பல் பயணத்தைத் தொடக்கி ஒரு கிழமையாயிற்று. தன் மனைவியின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருப்பது அவனுக்கு ஒரு திடுக்காட்டத்தோடு ஞாபகமானது. அதை அமெரிக்காவில் நின்றபோது நினைவுகொண்டு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல் அனுப்பாது போனமைக்காக கலாபன் தன்னையே நொந்துகொண்டான்.
கப்பல் மாறிமாறி ஏற்பட்ட அலைவீச்சுகளிலும் அமைதிச் சூழ்நிலைகளிலும் பயணித்துக்கொண்டிருந்தது.

மனோகரி ஒரு தை இருபத்தாறில் பிறந்திருந்தாள். தை இருபத்தாறுக்கு இன்னும் இரண்டே தினங்கள் இருந்தன. அன்று சனிக்கிழமை. அவளது பிறந்தநாள் ஞாயிறில் வருகிறது. கடலில் தன் மனைவியின் பிறந்தநாளை நினைவுகொள்ளப் போகிற அந்த முதல் தருணத்தைக் குறித்த பரபரப்போடு அவனது நேரங்கள் கடந்துகொண்டிருந்தன. அந்த மாதிரி முந்திய கடல்பயண காலங்களில் தான் அவளது பிறந்தநாளை நினைத்திருக்கவில்லை, நினைப்பே வந்திருக்கவில்லையென்கிற யதார்த்தம் ஒருவகையில் அவனை உலுப்பச் செய்தது. மனோவின் காட்டமான நடத்தைகள் ஒருவகையில் நியாயமானவையோ என தன்னுள் கேள்வியெழுப்பி அது அவ்வாறுதான் என்று நம்புகிற நிலையிலிருந்தான் கலாபன்.
பசுபிக் சமுத்திரம் அமைதி தோய்ந்து கிடந்தது. கிழக்கை நோக்கிய பயணத்தின் சில இரவுகளின் வேலைநேரங்கள் ஒரு மணிநேரம் அதிகமானதாக முடிந்துகொண்டிருந்தன. அதாவது அவ்வேலைநேரங்களின் ஐந்து மணிநேர வேலை நான்கு மணிநேரமாகக் கணிக்கப்படும்.

செவ்வாய் இரவு எட்டு மணிக்கு வேலை தொடங்கி தன் ஐந்து மணிநேர வேலை முடிந்து கலாபன் மேலே வந்தபோது பன்னிரண்டு மணி. பின்புற மேற்தளத்தில் அந்தக் குளிர்கால இரவிலும் பல்வேறு நிகழ்வுகளையும் உறவுகளையும் நண்பர்களையும் நினைத்தபடியே நின்று சிகரெட் புகைத்தான் அவன். மேலே அதிவடிவில் நிலா தொங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரமேதுமற்ற நீலமாய் வானம். மேகம்கூட திரண்டிருக்கவில்லை. அந்தளவு நிர்மலம்! நிர்மலம் என்பதன் அர்த்த பரிமாணக் காட்சியும் காலமும்.

விடிந்தால் மனோவின் பிறந்தநாள். குதூகலத்தோடேயே படுக்கப்போனான் அவன்.
வழக்கம்போல் காலையில் ஏழரை மணிக்கு தன்னை எழுப்ப தட்டப்படும் கதவுச் சத்தத்தின் முன்னரே எழுந்துவிட்ட கலாபன், மேலே மாலுமிகள் சாப்பாட்டறைக்கு வந்தான்.

ஞாயிறுகளில் பகல்வேலைகாரருக்கு வேலையில்லாததால் நிறைந்துபோயிருக்க வேண்டிய அந்த இடம் வெறித்துப்போயிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மெஸ்போய் அக்பரைக் கேட்டான். அவர்தான் சொன்னார், இன்றைக்கு ஞாயிறு இல்லையே என.
ஞாயிறு இல்லையா? என அவன் குழம்ப, அக்பர் விளங்கப்படுத்தினார்: ‘மேற்குப் பயணத்தில் வேலைநேரம் கூடிக்கொண்டு போகும். கிழக்குத் திசைப் பயணத்தில் அது குறையும். இதனால் மேற்குத் திசைப் பயணத்தில் ஒரு நாள் அதிகமாகும். நீதான் பார்த்திருப்பாயே, போனமுறை மலே~pயாவிலிருந்து நாங்கள் அமெரிக்கா போனபோது ஒரு செவ்வாய் அதிகமானது. அந்த வாரத்தில் நீ ஆறு நாட்கள் வேலைசெய்திருப்பாய். இரண்டு செவ்வாய்கள் வந்தன. அது ஞாபகமா?’

கலாபன் ஆமென்று தலையசைத்தான். இப்போது நிலைமை அவனுக்கு ஓரளவு புரிந்திருந்தது. ஆனாலும் அக்பர் தொடர்ந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். அக்பர் ஒரு முது கடலோடி. நாற்பதாண்டுக் கால கடற்பயண அனுபவம் கொண்டவர்.
‘பசுபிக்கில் அலையும் அமைதியும் பயங்கரமும் அழகும் மட்டுமில்லை கலா, அதிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சர்வதேச நாட்கோடும் வரையப்பட்டிருக்கிறது. கப்பல் பயணங்களின்போதுதான் பெரும்பாலும் நாள்களின் இந்தச் சடுதி மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. விமானப் பயணத்திலும் ஏற்படும்தான், ஆனால் உணரப்படாமலிருக்கும். இந்த இன்ரர்நே~னல் டேற் லைனை மேற்கிலிருந்து கடந்தால் ஒரு நாளை நீ இழப்பாய். கிழக்கிலிருந்து கடந்தால் அதிகமாய்ப் பெறுவாய். இழப்பதும் ஒரு தோற்றமாகவே இருக்குமே தவிர உண்மையில் அவ்வாறு நடப்பதில்லை. எல்லாம் ஒரு ஏற்பாடுதான்’ என்ற அக்பர் வேலை இருப்பதாகக் கூறி அப்பால் நகர்ந்தான்.

விறைத்துப்போய் நின்றிருந்தான் கலாபன். அக்பர் ஒருநாளை இழப்பதாகத்தான் கூறினான். ஆனால் அவனோ ஒரு நாளைத் தொலைத்திருக்கிறான். அவனது மனைவியின் பிறந்தநாள் தொலைந்திருக்கிறது கடலில். வாழ்வின் நேரம் இழக்கப்படாமல் நாள் தொலையும் அந்த அதிசயத்துடன் சாப்பிடாமலே என்ஜின்அறை சென்ற கலாபனை, ‘என்ன கலா, சோகமாக இருக்கிறாய்?’ என்று கேட்டான் என்ஜினியர். கலாபன் சிரித்து மழுப்பினான். அவனுக்குத்தான் அந்த இழப்பு புதுமையும் துக்கமும். அவனது என்ஜினியரான அந்தக் கிரேக்கனுக்கு அது ஏதுமற்றதாகக்கூட இருக்கலாம்.

கடிதத்தில் கலாபனின் இழப்பை வாசித்தறிந்த எனக்கும் அது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் கூட அவன் இணைத்திருந்த படம் என் எல்லா உணர்வுகளையும் அமுக்கிக்கொண்டு என் கவனமெல்லாத்தையும் தன்பால் ஈர்த்துக்கொண்டிருந்தது.

நான் கடிதத்தை வைத்துவிட்டு படத்தைப் பார்த்தேன். ஒரு மனிதனின் பல்நிலைப்படும் மனம்போல அது தன் பல்நிலைகளைக் அடக்கிக்கொண்டிருந்தது. நேரில் பிடித்துப் பார்க்கும்போது ஆடையோடு அழகு கொட்டக்கொட்ட நின்றிருந்த தங்கநிற முடிகொண்ட அந்த கட்டுமஸ்தான பெண் ஒரு சாய்வில் பார்க்கும்போது தன் ஆடைகளையெல்லாம் களைந்துவிட்டு பிறந்தமேனியளாய் நின்றுகொண்டிருந்தாள். இன்னும் மெல்லிய அசைப்பில் அவளது தனங்கள் இரண்டும்கூட குலுங்குவனபோல் காட்சியாகிக்கொண்டிருந்தது.
வயதில் முளைத்து அடங்கிக் கிடந்த உடலுணர்ச்சி தன் தளையுடைத்து வரத் திமிறியது. எவளோ ஒரு ஈழத் தமிழிச்சி, என்றோ ஒருநாள் மனைவியாகி வரும்வரை அந்த உணர்ச்சிகளை அடக்கிவைத்திருக்க முடியுமென அதுவரையிருந்த என் நம்பிக்கை என்னிடத்தில் அப்போது சரியத் துவங்கியிருந்தது.

000






Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்