கலாபன் கதை 2

நிறுதிட்டம் :

இரண்டு ஆண்டுகளாகியிருந்தன அந்த முதல் கப்பலிலிருந்து கலாபன் திரும்பிவருவதற்கு. ஊரே அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவன் வாங்கிவந்திருந்த சான்யோ திறீ இன் வண் செற்றைப் பார்க்க இளமட்டமெல்லாம் வீட்டைச் சுற்றி அலைந்தது. அவனது நீண்ட தலைமுடியும், டெனிம் ட்ரவுசரில் அவனது கம்பீரமான கப்பல் நடையும், அவ்வப்போது கிரேக்க ஆங்கில சொற்கள் கலந்த உரையாடலும் பலரை வசீகரித்தேவிட்டிருந்தன. இரண்டு கிழமைகளாக வீடு ஒரு சொர்க்கத்தில்போல் திளைத்துக்கொண்டிருந்தது.

மூன்றாவது கிழமை அவனது மனைவி மனோவின் தங்கை ரூபிணி இரண்டு நாட்கள் வந்து வீட்டிலே தங்கிவிட்டுப் போனாள்.

இரண்டு வருடக் காத்திருப்பு ஒட்டுமொத்தமும் ஏமாற்றமாகிவிட்டதைப்போல ஆகிப்போனாள் மனோ. அவன் கப்பலிலிருந்து கொண்டுவந்த வீடு ஏதோ விமானநிலையத்தில் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டுவர கலாபன்தான் தாமதிப்பதுபோலவும் அந்தரப்பட்டுக்கொண்டு திரிந்தவளின் முகம் பின்னால் கறுத்துச் சிதைந்தே போனது. கலாபன்கூட மாறித்தான் போனான். குழந்தையைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி எழவில்;;;;;;;லை அந்த வீட்டிலே. ரூபிணி காரணமாயிருக்கலாம் என்பதுதான் பேச்சாயிருந்தது அக்கம்பக்கத்தில். அதை ஊர்ஜிதப்படுத்தியது பக்கத்துவீட்டு பு~;பத்தின் சாட்சியம்.

பு~;பம் அருகிலிருக்கவே ஒருமுறை ரூபிணி கேட்டிருக்கிறாள் கலாபனிடம், ‘இந்த சான்யோ செற்றை ஏன் வாங்கிக்கொண்டு வந்தீங்கள், கலாபன்?’ என்று. ‘சான்யோவில சத்தம் நல்லாய் வரும்’ என்றிருக்கிறான் கலாபன். ‘மற்றதுகளிலை வராதோ?’ ‘வரும். ஆனா இதைப்போல வராது. கேட்டிட்டுத்தானே ஆசைப்பட்டு வாங்கினனான்.’ ‘நல்ல சத்தம்தான். இதை அவசரத்துக்கு விக்கக்கூட ஏலாது. நா~னல் பனசோனிக் இல்லாட்டி சோனி வாங்கியிருக்கலாம். ஆத்திரம் அந்தரத்துக்கு உதவும்’ என்று விட்டுவிட்டாள் ரூபிணி.

இன்னொரு முறை, ‘அத்திவாரம் எப்ப வெட்டப்போறியள், கலாபன்? அக்கா சொல்லிக்கொண்டிருந்துது நீங்கள் வந்தவுடனை வீட்டுவேலை துவங்கிறதாய்’ என்றிருக்கிறாள். கலாபன் அதற்கு ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு அங்கால போய்விட்டான். இன்னும் எதையெதை தமக்கையிடம் ‘ஓதி’வைத்துவிட்டுப் போனாளோ ரூபிணி, கலாபனின் முகம் அடுத்தடுத்த நாட்களில் களையிழந்துவிட்டது.
‘சுதுமலையிலை எனக்குத் தெரிஞ்ச ஒரு பெடியன் கப்பலுக்குப் போய் ஒரு வருசம் நிண்டிட்டு வந்து வீடே கட்டிச்சுது, அந்த வீட்டை கப்பல் வீடெண்டுதான் இப்பவும் அங்கை ஆக்கள் சொல்லுகினம், ரண்டு வருசம் கப்பலிலை நிண்டிட்டு வந்த உங்களாலை ஏன் முடியாமப் போச்சு எண்டு மதி கேக்கிறாள். ஜீவன் ஏறின கப்பல் போன வரு~ம் கடலிலை தாண்டுபோச்சு. தேப்பனும் தாயும் தலைதலையாய் அடிச்சு அழுதுகொண்டு திரிஞ்சுதுகள். இவள் ஏன் அதை நினைக்கிறாளில்லை. ஜீவன் செத்துப்போனான், நீயேன் உயிரோடை வந்தாயெண்டும் இவள் கேப்பாளோ?’ எண்டு ஒரு போதையேறிய தருணத்தில் தெரிந்தவர்கள் யாருக்கோ சொல்லிப் பிரலாபித்திருக்கிறான் கலாபன். பிறகு அவர்களுக்கே தான் இனிமேல் கப்பலுக்குப் போகப்போவதில்லையென்றும், விசுவமடுவிலேயுள்ள தம்பியாரின் காணியிலே போய்நின்று மிளகாய் செய்யப்போவதாகவும் வேறு சொல்லியிருக்கிறான்.

பிரத்தியட்சத்தில் ஒன்று, மறைமுகத்தில் ஒன்றாய் மனோவுக்கு இரண்டு இழப்புக்கள் நிச்சயமாகியிருக்கின்றன. இல்லாவிட்டால் அவள் அத்தனைக்குச் சாம்பிப்போய்த் திரியவும் முடிந்திராது. மாதம் மாதம் பணத்தை அனுப்பிக்கொண்டிருக்கும்படியும், தான் வீட்டுவேலையைத் தொடங்குவதாகவும் மனோ எழுதத்தான் செய்தாள். ஆனால் அதையும் செய்யாமல், வெறுங்கையோடும் வந்துசேரவேண்டிய நிலை எப்படியோ கலாபனுக்கு நேர்ந்திருக்கிறது. பணம் அவளின் பிரத்தியட்சமான இழப்பு. இரண்டு நீண்ட வரு~ங்களின் க~;டங்களும், தனிமையும், தாபங்களும் எந்த முகாந்திரத்தில் சாந்திப்படுத்தக் கூடியன? என்றாலும் அவற்றை அவளால் தாங்கியிருக்க முடியும். ஆனால் கப்பலில் செல்வோரின் ‘விளையாட்டுக்க’ளைப்பற்றி தங்கை ரூபிணி சொன்னவற்றையும் அவளால் தாங்கிக்கொண்டு இருந்திருக்க முடியுமா? அவளது அந்த இரண்டு வார இரவுகளும் முன்புபோல் காதலோடு இருக்கவில்லையே! அவன் வாத்ஸாயனக் கலையை பக்கம்பக்கமாய் அவளில் புரிந்துகொண்டிருந்தான். அந்தளவு காமாந்தகமும் தகும், அது காதலோடு இருந்திருந்தால். இல்லாதபோதில் அவளின் மறைமுகமான இழப்பை அது ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிக்கொண்டுதானே இருக்கச்செய்யும்! வெளிவெளியாகச் சொல்லாவிட்டாலும், இதில் உள்ளேயாவது மனோ குமுறாமல் இருந்திருக்க முடியுமா? முகம் கறுக்காமல் திரிந்திருப்பதுதான் எவ்வாறு?

எப்படியோ இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒரு ஞாயிறு மாலை ஏழு மணி ரயிலெடுத்து கொழும்புக்குப் போய்விட்டான் கலாபன். மறுநாள் வெறும் கையும் வெறும் கழுத்துமாய் மனோ இருப்பதைப் பார்த்து பு~;பம் நடந்திருக்கக் கூடியவற்றை எண்ணி ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். மதி இயல்பிலாகி இயங்கிக் கொண்டிருந்தாள். காலகாலமாகவும் இப்படித்தானே நடந்துகொண்டிருக்கிறது.

கலாபன் கப்பலால் வந்திருந்தபோது நான் திருகோணமலையிலே அரசாங்க வேலையில் சேர்ந்து அரச அச்சுக்கூடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு விடுமுறையில் ஊர் வந்தபோதுதான் கலாபன் வந்திருந்ததே தெரிந்தது எனக்கு. நான்கூட வேலைப் பிராக்கில் அவனை மறந்துதானே இருந்துவிட்டேன் பலகாலமாயும் என எண்ணி என்னில் ஏற்பட்டிருந்த வேதனையையும் சிறுகோபத்தையும் நான் அடக்கிக்கொண்டேன்.

மறுபடி நான் வேலைக்குத் திரும்பி இரண்டு மூன்று மாதங்களில் லண்டன் கப்பல் கொம்பனியின் முகவரியிட்ட கலாபனின் கடிதம் வந்தது எனக்கு. அது கட்டில் சேர்க்கப்பட்ட இடம் அமெரிக்கா என்பது அதன் அஞ்சல்தலையில் தெரிந்தது.

கடல்கொண்ட மல்லை என்கிறபோது, மாமல்லபுரத்தின் இழப்பின் வலிதுதான் பெரும்பாலும் தெரியும். கடலின் பிரமாண்டம் தெரியவராது. சமுத்திரம் நிலங்களை விழுங்கும் பிரமாண்டம் கொண்டது. மலைகளைத் தாழ்த்தி சமநிலங்களாகவும், சமநிலங்களை உயர்த்தி மலைகளாக்கவும் அதனால் முடிந்திருக்கிறது. அது கப்பல்களைக் கவிழ்க்கிறது, திமிங்கிலங்கள் சுறாக்களின் வாழிடமாய் நாவாய்ப் போக்குவரத்துக்களையே சீர்குலைக்கிறது என்றெல்லாம் கேள்வியிலுண்டு. ஆனாலும் இவைகூட கடலினை அறியப் போதுமானவையில்லை. சிறந்த கடல் சார்ந்த சினிமாக்களாலும்தான் இந்த அனுபவத்தைப் பூரணமாக ஏற்படுத்திவிட முடியாது.

கடலென்ற சொல்லே அதன் அம்சத்தைப் புரியவைக்கிறமாதிரியான சொல்லாக இல்லை. மாக்கடல் என்பதுகூட போதுமானதில்லை. ஓரளவேனும் செறிவான சொல் உண்டெனில் அது சமுத்திரம் என்பதுதான். இந்துமாக்கடல் அதன் விசாலத்தைக் காட்டக்கூடியதுதான். ஆனால் இந்துசமுத்திரம் என்பதே அதன் விசாலம், ஆழம், பயங்கரம், இரகசியங்களின் கொள்கலனாகக் கூடியது.

நிலமொன்றும் நீர் மூன்றுமான விகிதாரத்தில் இந்த உலகம் இயைந்ததாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். நிலம் ஐந்தாகக் கண்டப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் நீர் ஐந்து சமுத்திரங்களென. இவற்றில் இந்துசமுத்திரமே பெரிது. ஆனாலும் பசுபிக்கும், அத்திலாந்திக்கும் மூர்க்கத்திலும், பயங்கரத்திலும் சற்றும் குறைந்தவையல்ல இதற்கு. இவற்றின் தன்மைகள் வேறுவேறாக இருக்கும். ஆனாலும் உக்கிரங்கள் சமமானவை. இந்தவகையில் வட,தென் சமுத்திரங்களும் இவற்றிலிருந்து பெரிதாக வேறுபட்டவையல்ல. வடசமுத்திரம் மலைநிகர்த்த அலைகள் கொள்ளும், மறுபடி பள்ளத்தாக்காய் உட்சுருங்கும் தன்மைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் பயங்கரத்தில் எவற்றினுக்கும் குறைந்ததில்லை. ஒரு கப்பலை அப்படியே சப்பித் தின்னக்கூடியது அது. ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதில் ஒருமுறை ஒரு கப்பலை அப்படியே உறையவைத்து நொருக்கி தின்றுதீர்த்துவிட்டது வடசமுத்திரம். அது கப்பலை நொருக்கித் தின்ன ஆரம்பித்ததும் கப்பலிலிருந்த கப்ரின், மற்றும் கடலோடிகள் தம் உயிரபய நிலையை அறிவிப்புச் செய்துவிட்டு பனிப்பாளத்தில் இறங்கி உதவி வரும்வரை தங்க தோதான இடம் தேடி நடக்கத் தொடங்கிவிட்டார்களாம். சஞ்சிகையொன்றில் படத்தோடு செய்தி வந்திருந்தது.

சமுத்திரத்தின் உக்கிரத்தை அதன் மத்தியிலில்லாமல் அறியவே முடியாது என்றிருந்தான் கலாபன். கடலம்மா என்று அதனை அழைப்பது அதனைச் சாந்திப்படுத்தும் மீனவர்களின் உபாயம் மட்டுமே என வாதித்திருந்தான்.

கலாபன் ஏறி வேலைசெய்துகொண்டிருந்த கப்பல் சிங்கப்பூர் சென்று சாமான்கள் ஏற்றியபின் திரும்ப மலாக்கா கடல்வழியாக மலே~pயாவின் கிள்ளான் துறைமுகம் சென்றது. அங்கே டெக் கார்க்கோ என்ற மேற்தளத்தில் வைக்கக்கூடிய சாமான்களை ஏற்றியது. பெருமரங்களில் அறுத்தெடுத்த தூண்போன்ற மரங்களாகவும், தடித்த பலகைகளாகவும் அவை இருந்தன. அவை பெரிய கம்பிக் கயிறுகளால் நகரமுடியாது இறுக்கிப் பிணைக்கப்பட்ட பின் கப்பல் அமெரிக்காநோக்கிப் புறப்பட்டது. தென்சீனக் கடலுள் கப்பல் பிரவேசித்தபோதே காலநிலை நன்றாக இருக்கவில்லை.

ஒரு திடப்பொருள் அதனால் வெளியேற்றப்படும் கனவளவு நீரின் நிறைக்குச் சமமானது என எண்பித்திருக்கிறது விஞ்ஞானம். ஆந்த அளவையின்படி ஒரு கப்பல் சாமான்கள் எதுவுமின்றி கடலில் அதன் அதிகூடிய உயரத்தில் நின்றுகொண்டிருக்கும். சாமான்கள் ஏற்றிவிட்டால் அதன் ஆகக்கூடிய பாதுகாப்பான ஆழத்தில் போய்விட்டிருக்கும். மேற்தள சாமான்கள் கப்பல் ஏற்றக்கூடிய, இன்னொருவிதமாகச்; சொன்னால் அந்த பாதுகாப்பான அளவைத் தாண்டிவிடாத, அளவுக்கே ஏற்றப்படவேண்டும். சீரான காலநிலைக் காலங்களில் அந்த அளவைத் தாண்டிய பாரங்கள் ஏற்றப்பட்டு கப்பல்கள் செல்லிடத்தை ஆபத்தேதுமின்றி அடைந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

சாமான்கள் ஏற்றப்பட்ட பின் சிகரெட் புகைக்க மேற்தளத்துக்கு வந்தபோது கலாபன் கீழே பார்த்திருக்கிறான். கப்பலின் வெளிப்பக்கத்தில் தெளிவாக அளவுக் கோடுகள் இடப்பட்டிருந்த பாதுகாப்புச் சிவப்புக் கோட்டு எல்லை மறைந்தே இருந்தமை அவனுள் திடுக்காட்டத்தை ஏற்படுத்தியது. என்றாலும் கலாபன் பெரிதாக அதைத் தொடர்ந்தும் யோசனையிலெடுத்து கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. கப்பலில் முப்பத்தேழு பேர் கூடவிருக்கிறார்கள் என்பது எவருக்கும் அச்சத்தைத் தணிவிக்கிற அம்சம்தான்.

தென்சீனக் கடலைத் தாண்டியதும் கடல் சமுத்திரமாகிவிட்டது. பசுபிக்காய் வெளித்துக் கிடந்தது. தன் குமுறலை அது வெளிப்படுத்திய முறையானது, கப்பலைப் பந்தாடியமாதிரி இருந்தது. சாமான்களோடு சேர்த்து ஏறக்குறைய முப்பத்துமூவாயிரம் தொன் நிறையிருந்த கப்பலை அது பூப்பந்துபோல எறிந்து விளையாடியது. கப்பல் குமுறும் கடலின் வீச்சையெதிர்த்து ஐம்பதடி நகர்ந்ததெனில், ஓர் அலைவந்து அதனைத் தூக்கி முப்பதடிகள் பின்னால் வைத்துவிடும். கப்பல் இயந்திரம் மூசிமூசி வேலைசெய்தது. இவையெல்லாம் அச்சத் துளிகளைத் தெளிக்க ஆரம்பித்திருந்தது. மூன்றாம் நாளில் மாலை மெல்ல மறைந்து, கறுப்புக்கானதாய் எழுதப்பட்ட அந்தக் கரியஇரவு வந்தது. பசுபிக் சமுத்திரம் பயங்கர வடிவமெடுத்திருந்தது அந்த இரவில். கப்பலையே விழுங்கி ஏப்பமிட்டுவிட அப்படியொரு விறுமாண்டித்தனத்தில் சுழன்றடித்தது. கப்பலில் எங்கெங்கோ என்னென்னவோ பொருட்கள் விழுந்து உருண்டன. சில சிதறின. கலாபனால் தூங்கவே முடியவில்லை. சரியும் கப்பலில் ஒரு பக்கமாக ஏறும் நீர் மறுபக்கம் சரியும்வரை மேற்தளத்தில் உருண்டோடி விளையாடியமை சளசளவெனக் கேட்டது. மறுபடி அது மறுபக்கம் சாய்ந்து வழியும்வரை அந்த மரண இருப்பின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.

கலாபன் தேவைகள் துரத்த கப்பல் வேலைக்கு வந்தவன். ஆசை ஒரு காரணமாயிற்று பின்னால். ஆனால் அதற்காக அவன் செத்துவிட முடியாது. செத்துவிடுவதை லேசாக நினைத்துவிடவும் முடியாது. கப்பல் அந்தமாதிரி நிலைகெட்டு ஆடிய பொழுதுகளெல்லாம், மரணத்தின் கூத்தாய் இருந்துகொண்டிருந்தது. அது எப்போது நிற்கும்? எப்போது தூக்கம் கொள்வது? எப்போது அந்த இறுகிய பொழுதுகள் கரைந்து மனச்சுமையற்ற நிம்மதி மூச்சு விடுவது? பசுபிக் சமுத்திரத்துள்ளிருந்து மரணம் தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாய் எண்ணியெண்ணி கலாபன் கலங்கியிருந்த நாள்கள் அவை.

பசுபிக் சமுத்திரத்தினுள் பிரவேசித்த ஐந்தாம் நாள் ஓரளவு சமுத்திரத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கியது. மறுநாள் அந்த தை மாதக் காலையில் நெடுநாட்களின் பின்னான சூரியன் காணப்பட்டது. காற்று மெல்ல ஆடியபடி இருந்தது.

ஆனாலும் இன்னும் ஏதோ அசௌகரிகம் இருந்துகொண்டேயிருக்கிறதே, ஏன்?
வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது காரணம். கப்பல் ஏறக்குறைய இருபது பாகை சரிந்து போய்க்கொண்டிருந்தது. கப்பல் மேற்தளத்தில் ஏற்றிக் கட்டப்பட்டிருந்த போர்ட் பக்க மரங்கள் கட்டறுத்து வந்து ஒருபக்கமாய்ச் சிதறி ஒதுங்கியிருந்தன. மேலே வீல் கவுஸிலிருந்து கப்ரினும் பார்த்தான். அது பயப்படவேண்டிய அளவுக்கில்லையென்று சொன்னதோடு கலாபன் உட்பட எல்லோருமே நிம்மதியடைந்தார்கள்.

ஆனால் பிரச்சினை போகப்போகத்தான் வலுத்தது. கப்பல் சிறிதுசிறிதாக ஸ்ராபோர்ட் பக்கமாய் மேலும் சரிய ஆரம்பித்து விட்டது. கப்பல் பசுபிக் சமுத்திரத்தில் இன்னும் பாதித் தூரத்தைத் தாண்டவில்லை. ஹவாய்த் தீவுகள் கண்ணிலும் காணப்படவில்லை. ஓரளவு காலநிலையின் சீர்ப்பாடு இருந்தாலும், அதுவொன்றும் மன நிம்மதியைத் தரக்கூடிய அளவுக்காயில்லை. இரண்டு மூன்று நாட்களில் கப்பல் முப்பது பாகை சரிந்து போனது. கடலின் சாதாரண அலையே கப்பலுக்குள் ஏறி இறங்கவாரம்பித்துவிட்டது. சரிந்த பக்கத்தின் வட்டக் கண்ணாடி ஜன்னல் நீருள் தாழ்ந்தே இருந்தது. சில கபின்களுக்குள் இறுக்கிய ஜன்னல்க@டேயும் கடல்நீர் கசிந்தது.

ஒரு கப்பல் அவ்வாறான சமயங்களில் தன்னை நிறுதிட்டப் படுத்தப்படுவதற்கான உபாயங்களை இயல்பிலேயே கொண்டிருக்கும். உயர்ந்த பக்கத்தின் கீழேயுள்ள நீர்த்; தாங்கிகளில் கடல்நீரை நிறைப்பதன்மூலம் அதைச் செய்ய முடியும். அவ்வாறு அமைக்கப்பட்டவற்றை பாலஸ்ற் ராங்க் என்பார்கள். அவை இன்னொரு வகையாகவும் தொழிற்படும். அந்த ராங்குகளில் நிறைக்கப்படும் நீர் கப்பலொன்று காற்றின் பலத்தால் சரிக்கப்படும்போது, அப்படியே கவிழ்ந்து கடலுக்குள் அமிழ்ந்துவிடாமல், விழுந்தஒருவரை கையைப் பிடித்துத் தூக்கிவிடுவதுபோல் நிமிர்த்தி விட்டுவிடும். அந்த முறையின் மூலம்கூட கப்பலை நிமிர்ந்து செல்லவைக்க முடியவில்லை.

எண்ணெய்ப் பசை அதிகமான இடமாதலால் கீழே இயந்திரப் பகுதியில் வேலைசெய்த கலாபனுக்கு இன்னும் சிரமமாக இருந்தது. வேறுபேர் அடி பெரிதாக இல்லையென்றாலும் கீழே விழுந்தெழுந்தார்கள்.

மேலே சுக்கான் அறையில் வேலைசெய்த சாந்தன் கப்பல் சரியாக முப்பத்தைந்து பாகை சரிந்துவிட்டதாகச் ஒருநாள் சொன்னான். அப்போதுதான் ஒரு மதிய சாப்பாட்டு நேரத்தில் மெஸ்ஸில் வைத்து ஸ்பானியன் ஒருவன் சொன்னான், அப்படியான நேரத்தில் மேற்தள சாமான்களை கடலில் எறிந்துவிடுவதுதான் வழக்கமென்று. கப்ரின் ஏன் அவ்வாறு செய்யவில்லை? கப்பலினதும் சாமான்களினதும் காப்புறுதிப் பணத்தை மோசடிசெய்ய இப்படி ஓர் ஏற்பாடோ? எல்லோர் மனத்திலும் ஒரு பயம் உறைய ஆரம்பித்தது.

மறுநாளிலிருந்து அதுவே எவரினதும் பேச்சாகிப் போனது. கடலோடிகள் அவ்வாறு பேசுவது கப்ரின் காதுகளிலும் விழுந்திருக்கிறது. அல்லாமல் அவனாகவுமே இனி அதுதான் வழியென்று நினைத்துமிருக்கலாம். ஆனாலும் எழுந்தபாட்டுக்கு தன் முடிவுப்படியே அம்மாதிரிக் காலநிலையுள்ள காலங்களில் அவனால் நடந்துவிட முடியாது. கப்ரின் தலைமையகத்துக்கு உடனே வானொலிச் செய்தி அனுப்பினான் நிலைமையை விளக்கி. அவனை எதுவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாமெனச் சொன்ன தலைமையகம், உடனடியாக கப்பலைக் கட்டிய கம்பெனியுடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியது.

சில மணிநேரங்களின் பின் தலைமையகத்தின் முடிவையறியக் காத்திருந்த கப்பல் கப்ரினுக்கு பதில் வந்தது. அந்தக் கப்பல் நாற்பத்தைந்து பாகைகள் சரிந்தும் பயணக்கூடிய ஸ்திதி கொண்டது என்றும், மேற்தள சாமான்களை கடலுள் வீசவேண்டியதில்லையென்றும் வந்த பதிலைத் தெரிந்தபோதுதான் கலாபன் நிம்மதி மூச்சுவிட்டான்.

எந்தவொரு பொருளுமே தன்னைத் தக்கவைக்க ஒரு புள்ளியில் நிலைகொள்ளும் ஆற்றல் கொண்டதாகவே இருக்கும். கப்பல் ஒரு மனிதன்போல. அதற்கும் முதுகுத் தண்டு உண்டு. விலா எலும்புகள் உள. மனிதனது நிலைப்பின் தளம் எது? பாதங்கள் என்று சொல்லலாமா? ஆம், பாதங்கள்தான். அதன்மீது நிற்பது நடப்பது மட்டுமில்லை, அக்கம்பக்கம் சரியவும் செய்கிறான். அதுபோலத்தான் கப்பலும். அது நீரில் பயணப்படக் கட்டப்பட்டது. சொல்லப்போனால் கடலின் தன்மை தெரிந்து அதன் விசித்;திரங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் நிலைமை அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்களின் வாழ்க்கை ஏறக்குறைய இதுபோலத்தான். எதுவும் சாய்ந்துவிடலாம், ஆனாலும் கவிழ்ந்துவிடாது. மனித மனத்தின் அழுகையை, அவலத்தைத் தாங்கி நிலைபேறடைய உலகில் ஏதோ ஒன்று இருக்கவே செய்யும். அதற்கான தேடல்தான் அவசியம்.
நேற்று மரணம் நிகழாத மண்ணில்லை நான் இன்று வாழ்வது. நேற்று மரணம் நிகழாத வீடில்லை என்னதாய் இன்று இருப்பது. ஆனாலும் நாம் வாழ மட்டும் செய்யவில்லை, நாளையைப்பற்றிக் கனவுகூட காண்கிறோம், கப்பல்போலவே மனிதவாழ்வும். அது சரியும்தான் ஆனாலும் கவிழ்ந்துபோகாது, ஏதோ ஒரு புள்ளியில் வாழ்வின் மீட்டெடுப்பு நிச்சயமானது மச்சான்! என்று முடிந்திருந்தது கடிதம்.

கலாபனின் கடிதம் ஏற்படுத்திய மகிழ்ச்சியைவிட, அது ஏற்படுத்திய ஆச்சரியம்தான் அதிகம் என்னில். கலாபன் இப்படியெல்லாம்கூட எழுதுவானா என்பதை எனக்கு நம்பவே சிரமமாக இருந்தது. அவனும் என்போல எஸ்.எஸ்.சி. தான் படித்தான். என்ன எழுத்து! தன் அனுபவத்தை எவ்வளவு அற்புதமாகக் கடிதமாக்கியிருக்கிறான்! அந்த மொழியும் நடையும் அவ்வப்போது கவிதையெழுதும் எனக்கே சாத்தியமா என்று மனம் திகைத்தது.

எல்லாவற்றுக்கும் அவன் தண்ணி அடித்துவிட்டு எழுதியிருப்பான் என்று என்னுள் ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டேன். மனக் கருத்தொன்று விண்டுகொண்டு எழுத்துருவம் கேட்டு என்னை நச்சரிக்கும் நாளில் நானும் அவ்வாறே செய்துபார்க்கலாம் என்று அடிமனத்துள் ஒரு முகையெழுந்து திண்ணப்பட்டது. அப்படியான நாள் ஒரு சனிக்கிழமையாக இருந்தது. வழக்கத்தைவிட சற்று கள்ளைக் கூடுதலாகக் குடித்துவிட்டு எழுத வந்து உட்கார்ந்தேன்.

சிறிதுநேரத்தில் சத்திதான் வந்தது.

000








Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்