தான் பயிலாத கவசதாரிகள்

தான் பயிலாத கவசதாரிகள்

கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த உலக மகா யுத்தங்கள் இரண்டும் முடிவுற்ற காலங்கள், சமூக அக்றையுள்ள படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் மீது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திவிட்டு மறைந்துபோயிருந்தன. ஏர்னெஸ்ட் ஹேமிங்வே, வேர்ஜீனியா வூல்ஃப் போன்றோர் தற்கொலையே செய்துகொண்டார்கள். உலகமளாவி விரிந்திருந்த மனஅவலத்தின் பதியப்பட்டுள்ள சாட்சியங்கள் மட்டுமே இவை. பதியப்படாத அவலங்கள் இன்னும் எத்தனை எத்தனையோவாக இருந்திருக்க முடியும்.

அந்த அளவுக்கு படைப்பு இயலில் மனமீடுபட்டிருந்தவர்களும் சாதாரண மக்ளைப்போல தம் கையறுநிலைக் காலங்களில் இவ்வாறுதான் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பது யோசிக்க சற்று வியப்பாக இருக்கலாம் நமக்கு. ஆனால், தம் உலகமளாவ விரிந்துள்ள எதிர்பார்ப்புக்களும், மனித சமுதாயம்மீதான அக்கறைகளும் தம் கண்முன்னால் சரிந்துகொண்டிருப்பதைக் காணச் சகிக்க முடியாத இவர்களால் இப்படித்தான் நடந்துகொள்ள முடிந்திருக்கிறது.

அரசுகள் ஒன்றைச் சொல்லிக்கொண்டு வேறொன்றைச் செய்துகொண்டிருந்தன. சுதந்திரம் என்பது தமக்கானது மட்டுமே என்பதான அர்த்தமாக குறுக்கிக்  காணப்பட்டது. அழிவுகளில் தமக்கு மட்டுமானவையே கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன. விரிந்துகொண்டிருந்த செய்தித்துறையைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த அல்லது தமக்கு ஆதரவானவர்களாகக் கொண்டிருந்த இவர்களால் இப்படி வெகு இலகுவாக தம் ஆதிக்கப் போரினை, சுதந்திரத்துக்கானது அல்லது நாஜிகளுக்கெதிரானது என்பதாகப் பரப்புரை செய்ய முடிந்தது. அதைக் கண்டு வெகுண்டெழும் தனிமனித மனங்கள் இந்நிலையில் உடைந்துபோவது தவிர்க்கப்பட முடியாததுதான்.

ஆனால் நம்மைச் சுற்றி பன்மடங்கு அதிகமான கொடுமைகள்  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இன்றைய நிலையிலும் இவ்வாறு நடந்துவிடுமென்று பெரிதாக எதிர்பார்க்க முடியாது. நுகர் கலாச்சாரம், ஏகபோக முதலாளித்துவம் வளரவும் வாழவுமான சகல தந்திரோபாயங்களுடனும் கூடிய கருத்தாக்கத்தை முன்வைத்திருக்கிறது. முன்கூட்டிய ஒரு நிகழ்ச்சிரலின் அடிப்படையில் அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் வனப்பில் உண்மை பொய்யாகவும், பொய் மெய்யாகவுமோ, நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதாகவுமோ மறுதலையான தோற்றங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. தமது இயற்கை வளங்களைக் காக்கின்ற முயற்சிகளும், தம் தேசத்து கனிம எண்ணெய் வளங்களையும் தமக்கானது என்று கொள்ளும் போக்குகளும், சுதந்திரத்துக்கான விடுதலைக்கான போராட்டங்களும் இவ்வாறுதான் பயங்கரவாதமாகக் கட்டமைக்கப்பட்டு உலா விடப்பட்டிருக்கின்றன. அதற்கு ஆதரவான குரல்கள் எழுவதை நுகர்பொருட் கலாச்சாரத்தின் அடிப்படையில் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஈராக்கிற்கு எதிரான ஐக்கிய அமெரிக்காவின் யுத்தம், உண்மையில் பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு பயங்கரவாதம் தவிர வேறல்ல. இதைப் புரிந்துகொள்வதற்கு தம் தகவல் கிரகிப்பை முதலாளித்துவ தொலைக்காட்சி, வானொலி, தினசரிப் பத்திரிகைகளில் கொண்டிருப்பவர்களால் நிச்சயமாக முடியாது. நிகழ்வின் உண்மையென்பது சொல்லப்படுவதற்கு மறுபக்கத்தில் இருக்கிறது என்ற தர்க்கம் இதைப் புரிய மிக அவசியம்.
9|11 சம்பவத்தை எவ்வாறு நாம் விளங்கிக்கொண்டிருக்கிறோம்? பயங்கரவாதிகளின் ஜனநாயகம்மீதான தாக்குதலாகவன்றி வேறெதுவாக?

பயங்கரவாதம் என்பது மனித சமுதாயத்தின்மீது பயங்கரத்தையே விளைவிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மையே. இது அதன் புறம் மட்டுமே. அதற்கு ஓர் அகமும் இருக்கிறது. இந்த அகம்தான் செய்தியின் மறுபக்கம். ‘Terrorism  is the war of  poor and the war is terrorism of  rich’ என்ற பெயர்பெற்ற வார்த்தையின் உண்மை இங்கே கண்டடையப்படக்கூடும்.

தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் என்பது கடந்த நூற்றாண்டுச் சம்பவங்களாகிவிட்டன. அத்தியாவசிய சேவைகள் என்ற முறைப்படுத்தலில் இந்த வேலைநிறுத்தத்தின் முடிவை நிகழ்த்தியிருக்கின்றன அரசுகள். போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதா இல்லையா என்ற விவாதம் இப்போது ரொறன்ரோவில் நடந்துகொண்டிருக்கிறது.

வேலைநிறுத்த உரிமையென்பது திட்டமிடப்பட்ட சட்டவாக்கத்தில் உருவானதில்லை. அமெரிக்க நிலக்கரி, ரயில்வே, எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் தொழிலாளிகளால் உயிரும் இரத்தமும் தசையும் சிந்திச் சுவீகரிக்கப்பெற்ற உரிமை. உலகநாடுகள் பலவற்றிலும் முறையாகத்தான் பயன்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இன்று பல்வேறு நாடுகளில் இந்த உரிமையில்லை தொழிலாளருக்கு. ரிரிசி தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே நடைபெற்ற அண்மைய ஒரு கூட்டத்தின்போது, தொழிலாளரின் வேலைநிறுத்த உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போக்குவரத்துச் சேவையை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதை ஒப்புக்கொள்ளப் போவதில்லையென நிர்வாகம் தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறதான தகவல் மனச் சமாதானத்தைத் தருகிறது. ஆனாலும் பல்வேறு நாடுகள் இந்த உரிமையை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டன. அப்படியானால் இது குறித்து எழும் ஆவேசங்கள் எப்படியாகச் சென்று முடிவடையும் என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

1973 இல் நிர்மாணமான அந்த வர்த்தக இரட்டை மாடிக் கட்டிடங்கள் குறியீடுபூர்வமானவை. உலக அதிகார மய்யத்தின் குறியீடுகள் அவை. அதனால்தான் இரட்டைக் கோபுரத் தகர்வினைப்பற்றி ஒருமுறை கூறவந்தபோது சிந்தனையாளர் ழான் போத்ரியா, ‘வரலாற்றினதும் அதிகாரத்தினதும் விளையாட்டு அனைத்தும் இந்த நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆய்வின் சூழலும் அதன் விதிகளும்கூட இந்த ஒற்றை நிகழ்வினால் பாதிக்கப்பட்டுவிட்டன’ என்று கூறினார்.

அப்படியானால் இந்த இரட்டை மாடிக் கட்டிடங்களின் அழிவில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 1300 அடிகளுக்கு மேலான உயரமாக வளர்ந்து வானைத் தொட்டுக்கொண்டிருந்த கட்டிடங்கள் இவை. ஒரு சதுரமான அடித்தளத்திலிருந்தது அவற்றின் நிர்மாணம். ஒன்றெயொன்று பார்த்தபடி இக் கட்டிடங்கள். ஒன்றையொன்று பிரதியெடுத்ததுபோலவும் இருந்தன இவை. இவை கட்டிமுடிக்கப்பெற்றதும் நியூயார்க் நகரின் அமைப்பே மாறிவிட்டதாக ஒரு கட்டிடக் கலை நிபுணர் கூறினார். ஆம், அதுவரையிருந்த நகரின் அமைப்பை முழுமையாக மாற்றிய வடிவங்கள்தாம் இவை. கண்ணாடியாலும் இரும்பினாலும் சீமெந்தினாலும் அமைந்து உயர்ந்தெழுந்த ராக்பெல்லர் கட்டிடங்களும் நியூயார்க் நகரில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த இரட்டைக் கோபுரங்கள் முகப்புகள் அற்றவை. அதாவது முகங்கள் அற்றவை. அதனால்தான் ஏகபோகத்தினதும், போட்டியின்மையினதும் குறியீடுகளாக இவைகளால் நிமிர்ந்து நிற்க முடிந்திருந்தது. இந்த இரட்டைக் கூர்ங்கோபுரங்கள் குருட்டுத்தனமானவை என்று குறிப்பிடுகிறார் போத்ரியா. தம்மளவில் மூடிக்கொண்டவை. உலகத்தைநோக்கித் திறக்காதவை.

அதனால்தான் இவை தாக்குதற் குறிகளாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இந்த விளக்கங்களெல்லாம் நமக்கு இல்லை. ஆனாலும் நாம் நினைக்கிறோம், நாம் அனைத்தையும் தெரிந்துகொண்டிருப்பதாக.

நம் அறிவு நுகர்பொருட் கலாச்சாரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அதனால்தான் செய்தியின் அடியினாக, சொல்லப்பட்டதை நம்பும் பிராணியாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். அந்த விசுவாசத்துக்காகவே சில எலும்புத் துண்டுகள், சிலவேளை சிறிய அளவான இறைச்சியுடன் வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் படைப்பாளிகள், சிந்தனாவாதிகள் போன்றோர் நம் தலைமுறையில் தற்கொலை செய்யப்போவதில்லை அல்லது செய்வதில்லையென்று சொன்னேன்.

பாரத யுத்தம் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் பத்து நாளில் பீஷ்மர் உயிரோடிருக்கும் வரை தான் சண்டைசெய்ய மாட்டேன் எனக் கூறி கர்ணன் யுத்தத்திற்குச் செல்லவில்லை. பீஷ்ம மரணத்தின் பின் கர்ணனுக்கும் துரோணருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துரோணர் யுத்தம் செய்யாது விட்டுவிடுகிறார் சில நாட்கள். ஆனால் தான் பலமிழந்து நிற்பதாகக் கூறி அவரை யுத்தம் செய்ய வரும்படி துரியோதனன் இரந்து கேட்டதற்காய் அவனைப் பாதுகாக்க தன் மார்புக் கவசம் போதும் எனவும், அதை எத்தகைய சிறந்த வில்லாளியாலும் பிளக்க முடியாது எனவும் கூறி தன் கவசத்தைக் கொடுத்துவிடுகிறார் துரோணர். துரியோதனன் அதை அணிந்துகொண்டு போய் யுத்தம் செய்து அன்றைய பொழுதுக்கு உயிரோடு திரும்புவதாகக் கதை.

இந்தப் பகுதிக் கதை கூறும் அத்தியாயம் வியாச முனியின் மகாபாரதத்துப்படியான ராஜகோபாலாச்சாரியின் பாரதக் கதையில் ‘தான் பயிலாத கவச தராணம்’ எனப் பெயர்பெற்றிருக்கும்.

பெண்ணியம், தலித்தியம், மார்க்சியம், பின்நவீனத்துவமெல்லாம் மிக உன்னதமான கருத்தாக்கங்கள். தம் சமூக விருத்தியை மட்டுமன்றி, உலக மாந்தர் அனைவருக்குமான சுதந்திரத்தையும் சுபீட்சத்தையும் யாசித்துக்கொண்டிருப்பவை. நடைமுறையிலிருந்து  விலகி, புதிய நடைமுறைகள் படைக்க முனைபவை. ஆனால் இவற்றின் பெயர்கள் இன்று சிலரின் முகத்திரைகளாகி விட்டிருக்கின்றன. தேசிய இன விடுதலைகளுக்கும், நிரந்தர சமாதானங்களுக்கும் எதிராகத் தம் குரலைக் காட்ட முனைந்திருப்பது எனக்கு இந்த பாரதக் கதையினையே ஞாபகப்படுத்துகிறது. இதை ‘பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று’ என்றும் சொல்லலாம்தான்.

இப்படியான நடைமுறையாளர் இருக்கிற இடத்தில் நமக்கு முந்திய காலத்துச் சிந்தனையாளர்களுக்கு சமூக அவலங்களாலும், அரசுகளின் வல்லாதிக்கங்களாலும் ஏற்பட்டதுபோன்ற தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், மனச் சிதைவுகள் வருமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நிச்சயமாக எனக்கில்லை.

0

தாய்வீடு, செப்.2008)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்