சே குவேரா: ஒரு வரலாற்றுச் சோகம்

சே குவேரா:
ஒரு வரலாற்றுச் சோகம்


கடந்த இரண்டாயிரமாண்டுச் சரித்திரம் பல்வேறு புதைபொருள் ஆய்வுகள், மற்றும் நவீன அறிவியல் ரீதியிலான அறிமுறைகளால் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றிலிருந்து எமக்கு இக்காலகட்டத்திய அண்ணளவான வரலாறு கிடைத்திருப்பதாகச் சொல்ல முடியும். இதன் உண்மைத் தன்மை சந்தேகத்துக்கு உரியதாயினும், சொல்லப்பட்ட அந்த வரலாற்றினடியாகவே இச் சந்தேகங்கள் தோற்றமெடுக்கின்றன என்பதும் கவனம் கொள்ளப்படவேண்டும். உண்மையின் தவிர்க்கவியலா அழுத்தம் காரணமாய் இவ்வரலாறுகள் மாற்றியெழுதப்பட்டும் வருகின்றன. இல்லையெனில் மாற்றுவரலாறாய் விஸ்வரூபமெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரலாறு முழுக்க அவ்வப்போது நிகழ்ந்து வந்திருக்கிற நன்மைகளும், நல்லவர்களும் அழிக்கப்பட்ட சோகங்கள்தான் விரவிக்கிடக்கின்றன.

வரலாறு அறிந்துள்ள முதல் புரட்சியாளன் யேசுநாதர்தான். அந்த மரிப்பு – கொலைப்பாடு – தாங்கொணாத் துக்கம். கொடுமையின் உச்சம். அதைச் சினிமா மொழியில் வெளிக்கொண்டுவந்தது ‘THE PASSION OF CHRIST’. மனித இனம் இன்றும் யேசுநாதர் சிலுவையையே கடவுளாய் வணங்கி ஆன்ம வேதனை தணிகிறது.

அன்றைய கத்தோலிக்க மதத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய எராஸ்மஸ் எரித்துக் கொல்லப்பட்டான். மன்பதைக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுத்தவன் பிளேட்டோ. சிந்தனையென்பது உண்மையை அறிவதற்கான கதவமென்பதை உணர்ந்து, தமக்கெதிரான கலகமாக அச் செயற்பாட்டை எண்ண முடிந்ததில், அன்றைய கிரேக்க அதிகார வர்க்கம் அவனை நஞ்சுகொடுத்துக் கொலைசெய்தது. அறிவுலகத்தின் தலைசிறந்த பண்டைய சிந்தனாவாதியென இன்றும் உலகம் அவனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

நவீன காலத்தில் அமெரிக்காவில் கறுப்பினத்தாரின் வாழ்வுரிமையை ஊர்ஜிதம்செய்யும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த ஜோர்ஜ் வாஷிங்டன் சுடப்பட்டதும், அதிகார மமதைகொண்டு தொடங்கப்பட்ட வியட்னாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவிருந்த ஜோன் எப். கென்னடி கொல்லப்பட்டதுமான சம்பவங்கள் மறக்கப்பட முடியாதன.
அமெரிக்கக் கறுப்பினத் தலைவன் மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டும் வெகுகாலமில்லை. மகாத்மா என அழைக்கப்படும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி இந்துத்துவ வெறியினால் கொலை செய்யப்பட்டதை நம் அண்டைய தேசச் சரித்திரமாக நாமறிந்திருக்கிறோம்.

இத்தனை கொலைகளில் யேசுநாதரின் கொலைக்கு நிகரானது ஏர்னெஸ்ட் சே குவேரா என்ற ஆர்ஜென்ரீனாக்காரனின் கொலை. உலகம் முழுவதையும் தன் ஆயுத பலத்தால் அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் சதிவலைப் பின்னலினால் இது நடந்தது. தென்னமெரிக்காவின் அறியாமை, வறுமை, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக அப் பகுதியையே சோஷலிச மார்க்கம் நிறைந்த பூமியாக ஆக்கிவிட தன் தேசம்விட்டு வெளியேறி கியூபாவிலும், பொலிவியாவிலும், இன்னும் மற்றுமுள தென்னமெரிக்க மண்டலம் முழுவதிலுமே புரட்சியைக் கிளர்த்திவிட உழைத்த சேவினது மறைவுபோல் கொண்டாடப்படும் வரலாற்றுக் கதாநாயகன் நிகழ் சரித்திரத்தில் இல்லை.

பாபா சாகேப் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து ஆளும் வர்க்கத்துச் சாதிவெறியர்களுக்கு எதிராக இடையறாக் கருத்து யுத்தம் நடத்திக்கொண்டிருந்தவர். இன்றைக்கு அவர் பாதையில்தான் இந்தியாவின் தலித்திய இயக்கங்கள் ஏறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன. இருந்தும் எந்த வர்க்கத்துக்கெதிராக தலித்துக்கள் போராட்டம் நடத்துகின்றார்களோ, அந்த தலித்துக்களின் போராட்டங்களுக்கு சிந்தனைத் திறன் அளித்த அதே அம்பேத்கரை நினைவுகூர்ந்து ஆளும் வர்க்கங்களே நினைவுதினம் கொண்டாடுகின்றமை வரலாற்றின் முரண்நகை.

சே குவேரா கொல்லப்பட்டமை உலகமளாவிய துக்கத்தைக் கிளப்பியது. உண்மையினதும், புரட்சியினதும் ஆதரவாளர்களின் கதாநாயகனாக சே வளர்வதைத் தடுக்கவே முடியாத நிலை அதிகார வர்க்கத்துக்கு. அம்பேத்கர்போல் சே அரசாங்கங்களால் கொண்டாடப்படவில்லையெனினும், வேறுவிதமாக சேவினது மறைவு கவுரவிக்கப்படுகிறது. ஒரு புரட்சியாளனின் உருவப்படம் பொருந்திய பெனியன்கள் கோடிகோடியாய் விற்கப்பட்டமை உலக வரலாற்றில் எங்கேயும் நடைபெறவில்லை, எப்போதும் நிகழவில்லை. ஒருவகையில் சே என்றும் நினைவுகூரப்படும் புரட்சியாளன், சிலுவையில் தன்னை மரிக்கக் கொடுத்த யேசுநாதர்போல்.

அவர் வியாபார நோக்கங்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது எந்தவகையிலும் அவர்மீதான அன்பையும், கவுரவத்தையும் உண்மை ஓர்ந்த மனிதர்களிடத்தில் அகற்றிவிடவில்லை. அதிகார வர்க்கம் அம்பேத்கர் நினைவு நாளைக் கொண்டாடுவதின் உள்நோக்கம் புரியப்படக் கூடியது. அதுபோல் சேவினது உருவம் வியாபார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுவதும் புரிந்துகொள்ளப்படக் கூடியதே. அதிகார வர்க்கங்களின் இக் காயடிப்பு முயற்சிகளினால் அவர்களது முதன்மையும், முக்கியத்துவமும் உலக மக்கள் பார்வையில் நீர்த்துப்போவற்குப் பதிலாக, இன்னும் வலிமைகொண்டு மேற்கிளம்பவே செய்தன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது: ‘கொல்லப்படுபவர்கள் பாக்கியவான்கள்.’

இம் மாபெரும் புரட்சியாளன்பற்றி பல்வேறு சினிமாக்கள் வந்துள்ளன. ஆயிரக் கணக்கான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ‘மோட்டார்ச் சைக்கிள் டயரி’ என்ற சினிமா சேவின் இளமைக்கால வரலாற்றை, ஒருவகையில் தென்னமெரிக்காவின் சமகால வரலாற்றையுமே, சொல்லிய சினிமா. தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றில் பயணம் செய்து சே எழுதிய நாட்குறிப்பினது அடிப்படையில் அச்சினிமாவின் பிரதியாக்கம் இருந்தது.

சே பற்றிய நூல்களில் குறிப்பிடக்கூடியது அண்மையில் வெளிவந்துள்ள JhON LEE ANDERSON எழுதிய ‘CHE GUEVARA: A REVOLUTIONARY LIFE’. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் சினிமாதான் ‘THE TRUE STORY OF CHE GUEVARA’. இதை விவரணப்படமா, சினிமாவா எனச் சொல்லமுடியாதிருப்பது இப்படவாக்கத்தின் தனித்தன்மை.

அண்மையில் டிவிடியில் வெளிவந்திருந்தது. பார்த்தேன். அதிர்ந்துபோனேன். ஆனாலும் அதனடியில் இந்த உலகம், இந்த வாழ்க்கைபற்றிய ஒரு நம்பிக்கையிழையும் சேர்ந்து பிறந்தது. இதுபற்றி ஒரு நண்பருக்குச் சொன்னதும் எல்லா வாடகை DVD க்கடைகளிலும் தேடிவிட்டு கிடைக்கவில்லை என்றார். நானும் தேடிப்பார்த்தேன். நான் முன்னர் எடுத்த கடையில் அதன் ஒரிஜினல் கவர்கூட காணக்கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று யூகிப்பதும் சிரமம்தான். இது மறைந்ததற்குப் பின்னால் ஒரு கதையே இருக்கக்கூடும். அப்படி எதுவுமேயில்லாமலும் இருக்கலாம்தான். ஆனால் இந்த  நல்ல சினிமா பார்வையாளர்களின் மத்தியில் ஒரு களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘அவர் ஒஃப் த பர்னாசெஸ்’ என்றொரு ஆர்ஜென்ரீனிய படம் வெளிவந்திருந்தது. நூற்றெண்பது மணத்தியாலங்கள் படப்பிடிப்புச் செய்து, எண்பது மணத்தியாலங்களுக்குக் குறைத்து, கடைசியில் நாலு மணி இருபது நிமிஷங்களுக்கு எடிட்டிங் செய்து, மூன்று பாகங்களாய் வெளிவந்திருந்த ஒரு அரசியற் சினிமா அது. இரகசியமாய்த் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய ‘புத்தரின் பெயரினால்’ (IN THE NAME OF THE BUDDHA) என்ற சமகால இலங்கையர் கதைபற்றிய இந்திய சினிமாபோல அது.

இப்போது இன்னும் இரண்டு சே பற்றிய குறும்படங்கள் அல்லது விவரணத் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெளிவந்திருப்பதாய்த் தெரியவருகிறது. அண்மையில் தயாரிக்கப்பட்டவை. ஆனாலும் இன்னும் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை. இவைபற்றிய விமர்சனங்களையே சஞ்சிகைளில் பார்த்தேன். இவைபற்றிச் சொல்லப்பட்ட குறைபாடுகளில் முக்கியமானது சே குவேரா சோவியத் ரஷ்யாவுடனும் செஞ்சீனாவுடனும் கொண்டிருந்த தொடர்புகள்பற்றி யாதொரு பிரஸ்தாபமும் இந்த இரண்டு தமிழ் விவரணப் படங்களிலும் இல்லையென்பது. அவற்றை நிவர்த்தி செய்வதாயிருந்தது ‘THE TRUE STORY OF CHE GUEVARA’.

நாற்பதாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அவர் ஒஃப் த பர்னாசஸ்’ படத்தின் இறுதியில் சில நிமிடங்கள் காட்டப்பட்ட இறந்த சேவின் படம் மிகத் துன்பம் செய்வதாயிருந்தது. ஆனால் THE TRUE STORY OF CHE GUEVARA விலிருந்த கூடுதலான விவரணம் என்னவெனில், சே குவேரா உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் எந்தத் திசையில் செல்லவேண்டுமென்பதைத் தீர்மானித்து, அதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட எதிர் அணியைத்  திரட்டும் முயற்சியாக செஞ்சீனத்தை அணுகி மாஓ சே துங்கினைச் சந்தித்தமையாகும்.

பொலிவியாவில் கொல்லப்பட்டு புதைக்கப்பெற்ற சேவின் உடல் அறுபதுக்களின் இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இரண்டு மணிக்கட்டுகளும் அற்றதாக அது இருந்தது. வெட்டியெடுக்கப்பட்ட மணிக்கட்டுக்கள் எங்கே சென்றன  என்பதற்கான விடை, இந்த சே பற்றிய விவரணப்படத்தில் சாட்சிகளின் மூலமாக முன்வைக்கப்படுகிறது.
சே மறைந்திருக்கலாம். ஆனால் அவரது ஞாபகங்கள் உலகின் மனச்சாட்சி பயிலும் உலகங்களில் இன்னும் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை படத்தில் காண்கிறபோது மானிடம் பாடும் மனித ஜீவன்கள் மரணத்தைத் தழுவுவதில்லையென மனம் எக்காளமிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறுபவர்கள் உண்மையில் பாக்கியவான்கள்.



000

தாய்வீடு, ஆவணி  2008

Comments

Unknown said…
Good post.. keep it up.

Communism is a good way of living. unfortunately the meaning of revolution is misunderstood now a days.

thanks for the details.

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்